| ADDED : ஜூலை 31, 2024 11:39 PM
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ், 67. இவரது நிலம், திண்டிவனம் - நகரி ரயில் திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்டது. இதற்கு இழப்பீடாக அரசு, 6.27 லட்சம் ரூபாய் வழங்கியது. இதற்காக, அவர் சமர்ப்பித்த உண்மை ஆவணத்தை திருப்பி தர, ராணிப்பேட்டையை சேர்ந்த திண்டிவனம் - நகரி புதிய ரயில்வே நிலம் கையகப்படுத்தல் பிரிவு தாசில்தார் மதிவாணன், கோவிந்தராஜிடம் நேற்று முன்தினம், 6,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.அதற்கு அவர், 4,000 ரூபாய் தருவதாக கூறினார். இருப்பினும், பணம் தர விரும்பாத கோவிந்தராஜ், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். நேற்று, மதிவாணன் அலுவலகத்தில் இருந்தபோது அவரிடம், ரசாயனம் தடவி போலீசார் கொடுத்தனுப்பிய, 4,000 ரூபாயை, கோவிந்தராஜ் கொடுத்துள்ளார். அதை மதிவாணன் பெற்றபோது, ராணிப்பேட்டை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், அவரை கையும், களவுமாக கைது செய்தனர்.