மேட்டூர்: அ.தி.மு.க., தொழிற்சங்க மாவட்ட செயலாளர் டெண்டர் எடுத்து பார் நடத்தும் நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி, அதை அகற்ற அ.தி.மு.க., மாணவர் அணி துணை தலைவர் பகீரத முயற்சி செய்து வருகிறார். மேட்டூர், பி.என்.பட்டி, டவுன் பஞ்., அருகிலுள்ள ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை அருகில் பார் நடத்தப்பட்டது. கடந்த மாதம், டாஸ்மாக் பார் ஏலம் விடப்பட்டது. பி.என்.பட்டி டவுன் பஞ்., அருகிலுள்ள டாஸ்மாக் கடைக்கான பாரை அ.தி.மு.க., அண்ணா தொழிற்சங்க சேலம் மாவட்ட செயலாளர் ராமசாமி ஏலம் எடுத்தார். அதை தொடர்ந்து, டாஸ்மாக் கடை அருகில் செயல்பட்ட பார், அதே ரோட்டின் மறுபுறம் மாற்றப்பட்டது. தற்போது ஒருபுறம் டாஸ்மாக் கடை, மறுபுறம் 'பார்' செயல்படுகிறது. அந்த ரோட்டை கடந்துதான் காலை, மாலை நேரத்தில் மாணவ, மாணவியர் பள்ளிக்கு செல்கின்றனர். நேருநகர், பாலாஜி நகர், டி.எம்.பி.,நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்களும் செல்கின்றனர்.
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் கடை, பார் இரண்டையும் அங்கிருந்து அகற்ற வேண்டும் என, அ.தி.மு.க., மாணவரணி மாவட்ட துணை தலைவர் கண்ணன் போர்க்கொடி தூக்கியுள்ளார். இதுதொடர்பாக கண்ணன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் மகரபூசணத்தை சந்தித்து மனு கொடுத்தனர். அதனை தொடர்ந்து, மேட்டூர் ஆர்.டி.ஓ., சூர்யபிரகாஷ் கடந்த 7ம் தேதி சர்ச்சைக்குரிய, பார் நடத்தப்படும் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார்.
அ.தி.மு.க., மாணவரணி மாவட்ட துணை தலைவர் கண்ணன் கூறியதாவது: சர்ச்சைக்குறிய இடத்தில் உள்ள டாஸ்மாக் கடை, பார் இருப்பதை அகற்ற, கடந்த நான்கு ஆண்டுகளாக போராடி வருகிறோம். தி.மு.க., ஆட்சியின் போது கடை, பார் இரண்டையும் அகற்ற பலமுறை மனு கொடுத்தோம். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது ஆட்சி மாறியுள்ளதால், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கடை, பார் இரண்டையும் வேறு இடத்துக்கு மாற்ற அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்.டி.ஓ., சூர்யபிரகாஷ் கூறியதாவது: சர்ச்சைக்குரிய டாஸ்மாக் கடை, பார் செயல்படும் பகுதியில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் போது, பொதுமக்கள் இருவிதமான கருத்துகளை தெரிவித்தனர். எனவே, கடை, பார் இரண்டும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு இடையூறாக உள்ளதா என்பதை கண்டறித்து, மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.