உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 1.5 டன் சந்தன கட்டைகள் பறிமுதல் கடத்திய கேரள கும்பல் வளைப்பு

1.5 டன் சந்தன கட்டைகள் பறிமுதல் கடத்திய கேரள கும்பல் வளைப்பு

சேலம்;சேலம் மாவட்டம் சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையில் வனத்துறையினர், மகுடஞ்சாவடியில் கடந்த, 3ல் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 1.5 டன் சந்தன மரக்கட்டைகளை துண்டுகளாக்கி, 86 சாக்கு பைகளில் கட்டி கடத்தி வந்தது தெரிந்தது. சந்தன கட்டைகளை பறிமுதல் செய்து வனத்துறையினர் விசாரித்தனர். வாகனத்தை ஓட்டி வந்தது, கேரளம் மலப்புரத்தை சேர்ந்த டிரைவர் முகமது சுகைல், 34, அவரது உதவியாளர் முகமது பசிலு ரகுமான், 26, என தெரிந்தது. இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்ததில் மேலும், 4 பேருக்கு தொடர்பிருப்பது தெரிந்தது.இதையடுத்து ஈரோடு மாவட்டம் பவானியில், தனியார் ஓட்டலில் இருந்த மலப்புரத்தை சேர்ந்த முகமது மிசைல், 27, முகமது அப்ரார், 26, பஜாஸ், 35, உம்மர், 43, ஆகியோரை, வனத்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்கள் ‍‍‍‍கேரளத்தில் இருந்து கோவை, ஈரோடு, சேலம் வழியே சென்னைக்கு சந்தன கட்டைகளை கடத்தி செல்லவிருந்ததும் தெரிந்தது. இச்சம்பவத்தில் வேறு யாருக்கு தொடர்புள்ளது, யாருக்கு கடத்தப்பட்டது, விற்கப்பட்டது உள்ளிட்டவை குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !