சேலம்:சேலம் மாவட்டம், சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையில் வனத்துறையினர், மகுடஞ்சாவடியில் கடந்த, 3ல் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 1.5 டன் சந்தன மரக்கட்டைகளை துண்டுகளாக்கி, 86 சாக்கு பைகளில் கட்டி கடத்தி வந்தது தெரிந்தது. சந்தன கட்டைகளை பறிமுதல் செய்து வனத்துறையினர் விசாரித்தனர்.வாகனத்தை ஓட்டி வந்தது, கேரளா மலப்புரத்தை சேர்ந்த டிரைவர் முகமது சுகைல், 34, அவரது உதவியாளர் முகமது பசிலு ரகுமான், 26, என தெரிந்தது. இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்ததில் மேலும், நான்கு பேருக்கு தொடர்பிருப்பது தெரிந்தது.இதையடுத்து, ஈரோடு மாவட்டம் பவானியில், லாட்ஜில் இருந்த மலப்புரத்தை சேர்ந்த முகமது மிசைல், 27, முகமது அப்ரார், 26, பஜாஸ், 35, உம்மர், 43, ஆகியோரை, வனத்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்கள் கேரளாவில் இருந்து சென்னைக்கு சந்தன கட்டைகளை கடத்தி செல்லவிருந்ததும் தெரிந்தது. மேலும் வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.