சேலம்:ஹோட்டலில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி, பலரிடம், 1.50 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில், ஓட்டல் மேலாளரை கைது செய்த போலீசார், அவரது மனைவியை தேடி வருகின்றனர்.சேலம், செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்தவர் கோபிநாத், 55. இவரது மனைவி லலிதா. இவர்கள் ராமகிருஷ்ணா சாலை, அம்மாசி தெருவில் ஓட்டல் நடத்தினர். அங்கு ஆந்திராவை சேர்ந்த பரணிகுமார், 38, மேலாளராவும், அவரது மனைவி விஜியலாவண்யா, 35, சூப்பர்வைசராகவும் பணியாற்றினர். அவர்கள் சின்ன திருப்பதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினர்.ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம், 'உரிமையாளர் நான்தான்' என, பரணிகுமார் அறிமுகப்படுத்திக்கொண்டார். மேலும், 'ரிலையன்ஸ் மாலில் புது உணவகம் தொடங்க உள்ளதால் அதற்கு பங்குதாரராக சேர்க்கிறேன்' எனக்கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளனர். பரணிகுமாரின் நண்பர், சேலம், 4 ரோட்டை சேர்ந்த சந்தோஷ்குமார். இவரிடமும் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி, 43 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். இதேபோல் பலரிடம், 1.50 கோடி ரூபாய் வரை பெற்று, மனைவியுடன் பரணிகுமார் தலைமறைவாகிவிட்டார். சந்தோஷ்குமார் புகார்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர்.இந்நிலையில் கடந்த, 6ல் சின்னதிருப்பதி வந்த பரணிகுமாரை, போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து, 3 லட்சம் ரூபாய் மீட்டனர். மேலும் அவரது மனைவியை, போலீசார் தேடி வருகின்றனர்.