மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் இரண்டு நாளில், 9 டி.எம்.சி., அதிகரித்துள்ளது.கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர், மேட்டூர் அணைக்கு வருவதால், அணை நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த, 18ல், 31,102 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று முன்தினம், 44,353, நேற்று மாலை, 68,843 கனஅடியாக உயர்ந்தது. அதற்கேற்ப, 18ல், 51.38 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று, 63.83 அடியாக உயர்ந்தது. அதேபோல், 18.69 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு நேற்று, 27.62 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. இரு நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம், 12.5 அடி, நீர் இருப்பு, 9 டி.எம்.சி., அதிகரித்துள்ளது.நேற்று கர்நாடகாவின் கபினி அணைக்கு வினாடிக்கு, 45,658 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து, 40,292 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. அதேபோல் கே.ஆர்.எஸ்., அணைக்கு வினாடிக்கு, 51,375 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து காவிரி, கால்வாய்க்கு வினாடிக்கு, 4,714 கனஅடி நீர் திறக்கப்பட்டது.கே.ஆர்.எஸ்., அணை நீர்மட்டம், 120 அடி, நீர்இருப்பு, 43.5 டி.எம்.சி.,யாக இருந்தது. அணை நிரம்ப இன்னும், 6 டி.எம்.சி., தேவை. இதனால் அணையில் இருந்து எந்த நேரத்திலும் உபரிநீர், காவிரியில் திறக்க வாய்ப்புள்ளது. மண் அள்ளும் பணி நிறுத்தம்
மேட்டூர் அணையின் மூலக்காடு, தின்னப்பட்டி, பண்ணவாடி, செட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில், 4 நாட்களாக வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துச்சென்றனர். கபினி அணையில் திறக்கப்பட்ட உபரி நீர் வந்தததால் வறண்ட நீர்பரப்பு மூழ்கத்தொடங்கியது. இதனால் மண் அள்ள நேற்று முதல், தடை விதிக்கப்பட்டது. இதை அறியாமல் டிராக்டர்களுடன் வந்த விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.கலெக்டர் ஆய்வு
சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, மேட்டூர் அணை, 16 கண் மதகு பகுதியில் நேற்று ஆய்வு செய்து, பொறியாளர்களிடம் கேட்டறிந்தார். அங்கு கவர்னர் பார்வையாளர் மாடத்தில் உள்ள, நீர்வழித்தடம் குறித்த வரைபடத்தை பார்வையிட்டார். அவரது சந்தேகங்களுக்கு உதவி பொறியாளர் செல்வராஜ் விளக்கம் அளித்தார். கொளத்துாரை அடுத்த செட்டிப்பட்டி பரிசல்துறைக்கு சென்று தண்ணீர் வரத்தை பார்வையிட்டார். சிவசமுத்திராவில் வெள்ளம்
கபினி அணையின் மொத்த நீர்மட்டம், 65 அடி. நீர் இருப்பு, 19.5 டி.எம்.சி., கபினி நிரம்பும் தருவாயில், கடந்த, 4 முதல் காவிரியில் நீர்திறக்கப்பட்டது. 18ல் அதிகபட்சமாக வினாடிக்கு, 70,000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது.இந்த நீர் நேற்று, கர்நாடகாவின் மைசூரு, மாண்டியா மாவட்ட எல்லையில் உள்ள மளவள்ளி தாலுகா ஜாகேரி அருகே உள்ள நீர்வீழ்ச்சியை அடைந்தது. அங்கு காவிரி இரண்டாக பிரிந்து இரு இடங்களில் நீர்வீழ்ச்சியாக கொட்டி பின் ஒன்றாக சேர்ந்து தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவை அடைகிறது.இரண்டாக பிரிந்து கொட்டும் ஒரு நீர்வீழ்ச்சியை ககனசுகி என்றும், மற்றொரு நீர்வீழ்ச்சியை பரசுக்கி என்றும் கர்நாடகா மக்கள் அழைக்கின்றனர். தமிழக மக்களோ 'சிவசமுத்திரா' என அழைக்கின்றனர். கபினியில் திறக்கப்பட்ட உபரிநீர் பரசுக்கி, ககனசுக்கியில் நீர்வீழ்ச்சியாக கொட்டி மீண்டும் ஒன்றாக சேர்ந்து பிலிகுண்டுலுவை அடைந்தது. பல மாதங்களுக்கு பின் இரு நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டியது, கர்நாடகா மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.