மேட்டூர், மேட்டூர் அணை நிரம்பியதால், அங்கு வரும், 1.70 லட்சம் கனஅடி உபரி நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூர் - இடைப்பாடி சாலை மூழ்கி போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., கடந்த, 30ல் அணை நிரம்பியது. நேற்று மதியம், 4:00 மணிக்கு, அணைக்கு வினாடிக்கு, 1.70 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து உபரிநீர், 16 கண் மதகில், 1.48 லட்சம் கன அடி திறக்கப்பட்டுள்ளது. தவிர அணை மின் நிலையங்கள் வழியே, 21,500 கன அடி, கால்வாயில், 500 கன அடி என, மொத்தம், 1.70 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் மேட்டூரில் கரையோர மக்களின் பாதுகாப்பு முன்னேற்பாடு, பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படும் உபகரணங்கள், தீயணைப்புத்துறையினர் தயார் நிலை உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர், கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வு செய்தனர்.குறிப்பாக அணையை சுற்றியுள்ள பகுதிகளான தங்கமாபுரிபட்டணம், பெரியார் நகர், வ.உ.சி., நகர் பகுதிகளில், வெள்ள பாதிப்பு உள்ள நிலையில், முகாம்கள் தயாராக உள்ளது. அங்கு மக்களை முன்னெச்சரிக்கையாக அனுப்பும்படி, கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் அணை பாதுகாப்பு குறித்து, நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஆலோசித்தார்.மேட்டூர் அணை உபரிநீர் போக்கி வழியே தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால் அனல் மின் நிலையம், சங்கிலி முனியப்பன் கோவில் வழியே இடைப்பாடி செல்லும் சாலை மூழ்கியது. இதனால் கான்கிரீட் தடுப்புகளை வைத்து போக்குவரத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். சங்கிலி முனியப்பன் கோவில், கோல்நாயக்கன்பட்டி, பொறையூர், செக்கானுார் கிராமங்களுக்கு போக்குவரத்து தடைபட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். தவிர அனல் மின் நிலையத்தில் இருந்து சாம்பல் எடுத்து வரும் லாரி போக்குவரத்தும் தடைபட்டது.பள்ளி வாகனங்களும் இயக்க முடியாததால், பெற்றோர், குழந்தைகளை காவிரி கிராஸ் பாலம் வழியே, இருசக்கர வாகனங்களில் அழைத்துச்சென்றனர். மேட்டூர் - இடைப்பாடி செல்லும் அரசு பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.'யாரும் வர வேண்டாம்'ஆடிப்பெருக்கை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள காவிரி கரையோரங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.அதில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் அணைக்கு வரும், 1.70 லட்சம் கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. வருவாய், நீர்வளம், போலீஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை, விழிப்புணர்வு எச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆக., 3, 4ல்(சனி, ஞாயிறு) சுற்றுலா பயணியர், மக்கள், மேட்டூர் அணை, அதை சுற்றியுள்ள காவிரி கரையோர பகுதிகளுக்கு வருவதை பாதுகாப்பு கருதி தவிர்க்க வேண்டும். குறிப்பாக, 3ல் ஆடிப்பெருக்கால் பாதுகாப்பு கருதி, காவிரி ஆற்றில் இளைஞர்கள், மக்கள், சுற்றுலா பயணியர், நீரில் இறங்கி குளித்தல், நீச்சல் அடித்தல், மீன் பிடித்தல், கால்நடைகளை குளிப்பாட்டுதல், 'செல்பி' எடுத்தல், வேடிக்கை பார்ப்பது போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். நீர்நிலை அருகே குழந்தைகள் செல்லாமல் இருப்பதை பெற்றோர் கவனமாக கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.30 வீடுகளை சூழ்ந்த தண்ணீர்மேட்டூர் அணை நிரம்பி அங்கு வரும், 1.70 லட்சம் கன அடி உபரிநீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சங்ககிரி, தேவூர் அருகே காவேரிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி மதிக்கிழான்திட்டு, மணக்காடு பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. காவேரிப்பட்டி பரிசல் துறையில் உள்ள பஞ்சமுக விநாயகர் கோவில், ராகு, கேது கோவில், கம்பத்தையன் கோவில்களையும் தண்ணீர் சூழ்ந்தது. கல்வடங்கம், வெள்ளாளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அன்னமார் கோவில் பகுதிக்கு செல்லும், சரபங்கா ஆற்றுப்பாலம் மூழ்கியது.இதனால் இடைப்பாடியில் இருந்து வட்ராம்பாளையம் வழியே குமாரபாளையம் செல்லும் அரசு பஸ்கள், நெடுங்குளம், கோனேரிப்பட்டி, கல்வடங்கம் பகுதிகளில் இருந்து அன்னமார் கோவில் பாலம் வழியே குமாரபாளையம், பவானி செல்லும் அரசு டவுன் பஸ்கள், மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. மேலும் அந்த பாலம் வழியே செல்லும் விவசாயிகள், பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியர், வேலைக்கு செல்வோர் சிரமத்துக்கு ஆளாகினர். காவேரிப்பட்டி, அண்ணமார் கோவில் பகுதி, கோனேரிப்பட்டி அருகே என, 3 இடங்களில் உள்ள நீரேற்று நிலையங்களையும் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அதன்மூலம் தேவூர், அரசிராமணி, சங்ககிரி, திருச்செங்கோடு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.தேவூர் அருகே கொட்டாயூர், ஆத்துக்காடு, கோம்புக்காடு, கல்வடங்கம், காவேரிப்பட்டி, வெள்ளாளபாளையம், அன்னமார் கோவில், ராணா தோட்டம், புள்ளாகவுண்டம்பட்டி, ராமக்கூடல், வேலாத்தா கோவில், புளியம்பட்டி உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில், 500 ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த பருத்தி, வாழை, கரும்பு, மஞ்சள், தென்னை, வெண்டை, சோளம் உள்ளிட்ட பயிர்கள் முழ்கிவிட்டன. காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள மின் மோட்டார் கிணறுகள் மூழ்கின. இதனால் காவிரி கரையோரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வருவாய்த்துறையினர், போலீசார், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று காவிரி கரையோர பகுதிகளில் வீடுகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு அனுப்பினர்.