| ADDED : பிப் 12, 2024 10:23 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 80 ஏக்கரில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. சில விவசாயிகள், தாதகாப்பட்டி உழவர் சந்தையில் விற்கின்றனர். ஆனால் வரத்து குறைந்தது. இதனால் நேற்று முன்தினம், சேலம் வேளாண் துணை இயக்குனர் பாலசுப்ரமணியம் (வணிகம்), பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் கம்மாளப்பட்டி, தும்பல்பட்டி உள்ளிட்ட இடங்களில் தக்காளி விவசாயிகளை சந்தித்து பேசினார்.பின், 'வெளியூருக்கு கொண்டு செல்ல வேண்டாம்; உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்க வேண்டும். உரிய விலை கிடைக்கும். சந்தையில் தேவையான வசதி ஏற்படுத்தி தரப்படும்' என, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பனமரத்துப்பட்டி 'அட்மா' திட்ட தலைவர் பொன்னுசாமி, தமிழ்நாடு அனைத்து உழவர் சந்தை விவசாயிகள் கூட்டமைப்பு சேலம் மாவட்ட தலைவர் தங்கவேல் உடனிருந்தனர்.இதுகுறித்து பாலசுப்ரமணியம் கூறுகையில், ''வேண்டுகோளை ஏற்று நேற்று, தாதகாப்பட்டி உழவர் சந்தைக்கு கூடுதலாக, 3 டன் தக்காளியை விவசாயிகள் கொண்டு வந்தனர். கிலோ, முதல் தரம், 25 ரூபாய், 2ம் தரம், 20 ரூபாய், சிறு தக்காளி, 18 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டது. உழவர் சந்தையில் விற்றால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். வெளியூர் மார்க்கெட் செல்வதற்கு ஆகும் வண்டி வாடகை, வரி போன்ற செலவு குறைகிறது,'' என்றார்.