சேலம்: போலி ஆவணம் மூலம், 3 கோடி ரூபாய் நிலத்தை அபகரிக்க முயன்ற, கால்நடை தீவன ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அவருக்கு துணைபோன முன்னாள் தாசில்தாரை போலீசார் தேடுகின்றனர். சேலம், கல்லாங்குத்தை சேர்ந்த விவசாயி சரவணன், 54. இவருக்கு அம்மாபேட்டை அடுத்த தாதம்பட்டியில், 48 சென்ட் நிலம் உள்ளது. இவர், இந்த நிலத்தை, 2009ல், அதே பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவரின் குடும்பத்தினரிடமிருந்து வாங்கியுள்ளார். அதேபோல் நாராயணனின் தங்கை ஜெகதாம்பாளுக்கு அதன் அருகே உள்ள, 35 சென்ட் நிலத்தை, 1994ல் தங்கவேல் என்பவர் வாங்கியுள்ளார். சேலம், சூரமங்லகம், புது ரோடு, எலக்ட்ரானிக் தொழிற்பேட்டையை சேர்ந்தவர் ரவீந்திரன், 46. கால்நடை தீவன ஆலை வைத்துள்ள இவர், சரவணன் நிலத்தை அபகரிக்க திட்டமிட்டு தங்கவேல் நில ஆவண எண்களை அப்படியே பயன்படுத்தி, போலி ஆவணம் தயாரித்துள்ளார். இதற்கு ஜெகதாம்பாளின் மகன் மூர்த்தி உடந்தையாக இருந்துள்ளார். குறிப்பாக ஈரோடு மாவட்டம், பெருந்துறை போலீசில் மூலப்பத்திரம் காணாமல் போனதாக புகார் அளித்து சான்றிதழ் பெற்று ஈரோடு சார் - பதிவாளர் அலுவலகத்தில் மூர்த்தியிடமிருந்து சொத்து, ரவீந்திரன் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. போலி ஆவணத்தை பயன்படுத்தி இந்த மோசடி நடந்துள்ளது. தற்போது ஜெகதாம்பாள், மூர்த்தி உயிருடன் இல்லை. இதை சாதகமாக பயன்படுத்தி, போலி ஆவணம் மூலம் சரவணன் நிலத்தை அபகரிக்க ரவீந்திரன் முயன்றார். இதில், அவர்கள் இடையே மோதல் போக்கு உண்டானது. பாதிக்கப்பட்ட சரவணன், சேலம் மாநகர் நில அபகரிப்பு பிரிவில் புகார் அளித்தார். விசாரணையில், போலீசில் பொய் புகார் அளித்து சான்றிதழ் பெற்று போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்றது உறுதியானது. அந்த நில மதிப்பு, 3 கோடி ரூபாய். இதற்கு ஓய்வு பெற்ற தாசில்தார் பெருமாள் உடந்தையாக செயல்பட்டதும் தெரிந்தது. இதுதொடர்பாக கூட்டு சதி, போலி ஆவணம் தயாரித்தல், அதை உண்மை ஆவணமாக பயன்படுத்தல், மோசடி, கொலை மிரட்டல் உள்பட, 8 பிரிவுகளில் வழக்குப்பதிந்த போலீசார், நேற்று முன்தினம் ரவீந்திரனை கைது செய்தனர். மேலும் பெருமாளை தேடி வருகின்றனர்.ஏற்கனவே சூரமங்கலத்தில், 6 கோடி ரூபாய் வீட்டை அபகரிக்க முயன்றதாக ரவீந்திரன் மீது விசாரணை நிலுவையில் உள்ளது. தவிர, 2020ல் அவரது குடோனில் வேலை செய்த, 12 வயது சிறுமியை சில்மிஷம் செய்ததாக, ரவீந்திரன் குண்டாஸில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.