| ADDED : ஆக 05, 2011 02:07 AM
சேலம்: சேலம், குரும்பப்பட்டி உயிரியில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் யானையை, கோவை டாக்டர்கள் சோதனை செய்தனர். சேலம், ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில், கட மான்கள், புள்ளி மான்கள், யானை, நட்சத்திர ஆமைகள், கொக்கு, நாரை உள்பட பறவைகள் உள்ளன. சேலம் நகர மக்களின் பொழுது போக்கும் இடமாக உயிரியல் பூங்கா உள்ளது. நோயால் அவதிப்பட்டு வந்த, 61 வயது மதிக்கத்தக்க மதுரை ஆண்டாள் அழகர் கோவில் யானை, இந்த பூங்காவில் கடந்த இரண்டு ஆண்டாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கோவையை சேர்ந்த கால்நடைத்துறை டாக்டர் மனோகரன், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவுக்கு வந்திருந்தார். அவர், யானையின் உடல் நிலையை சோதனை செய்தார். சோதனையில், யானை நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர் கூறினார். மேலும், மான்கள், பறவைகள் ஆகியவற்றின் உடல் நலத்தையும் டாக்டர் ஆய்வு செய்தார்.