ஹவுசிங் போர்டில் குடிநீரின்றி அவதி
சேலம், டிச. 19-சேலம், 47வது வார்டு, ஆண்டிப்பட்டி ஏரி ஹவுசிங் போர்டை சேர்ந்த பெண்கள், காலி குடங்களுடன் நேற்று மாநகராட்சி அலுவலகம் வந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சேலம் குகை, ஆண்டிப்பட்டி ஏரி ஹவுசிங் போர்டில், 15 ஆண்டுகளுக்கு முன், 450 குடும்பங்கள் இருந்தன. மாநகராட்சி சார்பில் ஒரு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. தற்போது, 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். தற்போதும் ஒரு குடிநீர் குழாய் மட்டுமே உள்ளது. அதிலும், 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வருவதால், குடிநீரின்றி அவதிக்கு ஆளாகியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.போலீசார், அலுவலர்கள் பேச்சு நடத்தி, மனு பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தனர்.