| ADDED : பிப் 01, 2024 10:21 AM
சேலம்: அ.தி.மு.க.,வை சேர்ந்த மாநகர், மாவட்ட செயலர் வெங்கடாஜலம், புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், 6 பேர், சேலம் கலெக்டர் பிருந்தாதேவியை, அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து பேசினர். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்தது. பின் இளங்கோவன் கூறியதாவது:தலைவாசல் வி.கூட்ரோட்டில், 1,470 கோடி ரூபாய் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள தேசிய ஒருங்கிணைந்த கால்நடை அறிவியல் மற்றும் உயர் ஆராய்ச்சி நிலையம், முழுவீச்சில் பயன்பாட்டுக்கு வரவில்லை. இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாக செயல்படுவதால் அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்று உரிய நடவடிக்கை எடுக்க முறையிட்டுள்ளோம்.பெரும்பாலான கிராமங்களில் பஸ் வசதி நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கிராமங்களுக்கு மினி பஸ் இயக்க வேண்டும். பல கிராமங்களில் குடிநீர் பிரச்னை உள்ளது. கோடை காலம் நெருங்குவதால் அதற்குள் கூட்டுகுடிநீர் திட்டத்தை செம்மைப்படுத்தி குடிநீர் தட்டுப்பாடு வராமல் தகுந்த நடவடிக்கை எடுக்க, கலெக்டரிடம் தெரிவித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.எம்.எல்.ஏ.,க்களான, சேலம் தெற்கு பாலசுப்ரமணியன், கெங்கவல்லி நல்லதம்பி, ஆத்துார் ஜெயசங்கரன், ஏற்காடு சித்ரா, வீரபாண்டி ராஜமுத்து, ஓமலுார் மணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.