பயன்பாட்டுக்கு வராத புது எஸ்கலேட்டர்; பழைய பஸ் ஸ்டாண்ட் பயணியர் அவதி
சேலம்: பழைய பஸ் ஸ்டாண்டில், 'எஸ்கலேட்டர்' பணி முடிந்து, 4 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாததால் பயணியர் அவதி அடைந்து வருகின்றனர்.சேலம், பழைய பஸ் ஸ்டாண்டில், சீர்மிகு நகர திட்டத்தில், 96 கோடி ரூபாயில், 2 அடுக்கு பஸ் ஸ்டாண்டாக மாற்றப்பட்டது. அதில், 11,500 ச.மீ., தரைத்தளத்தில், பஸ் ஸ்டாண்டை சுற்றி, 4,586 ச.மீ., வணிக கடைகள் கட்டப்பட்டுள்ளன. தரைத்தளத்தில், 26, இரண்டாம் தளத்தில், 26 பஸ்கள், ஒரே நேரத்தில் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. முதல் தளம் செல்லும் பயணியர், படிக்கட்டுகள் வழியே ஏறிச்செல்ல வேண்டியிருந்தது. இரு, 'லிப்ட்' வசதி இருந்தபோதும், பெரும்பாலும் செயல்படாமல், கூட்ட நேரத்தில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.இதை தவிர்க்க, 'எஸ்கலேட்டர்' எனும் நகரும் படிக்கட்டுகள் அமைக்க, 2.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, 2023 டிசம்பரில் பணி தொடங்கியது. இரு மாதங்களில் பணி முடியும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒப்பந்ததாரருக்கு நிதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால், ஒரு வழியாக பணி முடிந்து, 2024 அக்., 17ல் சோதனை ஓட்டம் நடந்தது. பின் திறப்பு விழாவுக்கு மூடப்பட்டு, 4 மாதங்கள் நிறைவடைந்தும் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டுவராததால், பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக முதியோர், படிக்கட்டுகளில் சிரமப்பட்டு ஏறி, இறங்குகின்றனர். முதல்வர் சேலம் வரும்போது திறக்க திட்டமிட்டுள்ளதாக, அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இதனால் பயணியர் அவதி தொடர்வதால், விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.