| ADDED : ஜன 30, 2024 03:18 PM
ஆத்துார் : ஆத்துாரில், தனியார் பார்சல் நிறுவன கிளை மேலாளர் தற்கொலை செய்து கொண்டார்.சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, நரசிங்கபுரம் கலைஞர் காலனியை சேர்ந்த பழனிசாமி மகன் ராகுல், 27. பட்டதாரியான இவர், விநாயகபுரம் கூட்ரோடு பகுதியில் உள்ள தனியார் பார்சல் நிறுவனத்தில், (அமேசான் ஸ்மார்ட் பே) எட்டு ஆண்டுகளாக கிளை மேலாளராக பணிபுரிந்து வந்தார்.நேற்று, தனது நண்பர்களின் மொபைல் போன் வாட்ஸ்ஆப்பில் ஆடியோ வெளியிட்டு துாக்கிட்டுள்ளார். அதையறிந்த நண்பர்கள், அவரை மீட்டு ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ராகுல் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். ராகுல் அனுப்பிய ஆடியோ மற்றும் கிளை அலுவலகத்தில் அவர் துாக்கிட்டு கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.ராகுல் பதிவு செய்த ஆடியோவில், 'நிறுவன உரிமையாளர், நாமக்கல் நிர்வாகி உள்பட மூன்று பேர், மனரீதியாக துன்புறுத்தியும், கூடுதல் பணம் செலுத்த வேண்டும் என, தொந்தரவு செய்து வந்தனர். இதனால், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன். தங்களது பெற்றோரை கவனமாக பார்த்துக் கொள்ளவும்' என, பேசியுள்ளார்.இறந்த ராகுல் உடலை கைப்பற்றி, இறப்புக்கான காரணம் குறித்து ஆத்துார் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.