| ADDED : ஜூன் 24, 2024 07:27 AM
சேலம்: சேலம், களரம்பட்டி மக்கள், அப்பகுதியில் உள்ள பிரதான சாலையில் காலிக்குடங்களுடன் நேற்று காலை திரண்டனர். தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். கிச்சிப்பாளையம் போலீசார் பேச்சு நடத்தினர்.அப்போது மக்கள் கூறியதாவது: இப்பகுதியில், 20 நாட்களாக மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகிக்கவில்லை. தண்ணீர் வரும்போது சாக்கடை கலந்து வருகிறது. இதற்கு பாதாள சாக்கடை திட்ட பணிக்கு பள்ளங்கள் தோண்டும்போது பைப்புகளில் ஏற்படும் உடைப்பே காரணம். இதை பணியின்போது சரிசெய்வதும் கிடையாது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் பலனில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதற்கு போலீசார், 'அதிகாரிகளிடம் தெரிவித்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறினர். இதனால், 30 நிமிடங்கள் நடந்த மறியலை கைவிட்டு, மக்கள் கலைந்து சென்றனர்.