பைக் மோதி சிறுமி பலி உறவினர்கள் சாலை மறியல்
சேலம், சேலம், சித்தர்கோவில் செஞ்சிக்கோட்டையை சேர்ந்தவர் பெருமாள், இவரது மகள் கிருத்திகா, 8. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில், 3ம் வகுப்பு படித்தார். கடந்த, 30 மாலை, பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, 'ரைடர்' பைக் மோதியதில், சிறுமி பலத்த காயம் அடைந்தார். பைக் ஓட்டி வந்தவரும் காயம் அடைந்த நிலையில், அவர் அங்கிருந்து தப்பிவிட்டார்.மக்கள், கிருத்திகாவை மீட்டு சேலத்தில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று காலை உயிரிழந்தார். கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.இந்நிலையில் உறவினர்கள், விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்யக்கோரி, சிறுமி உடலை, சிவதாபுரம் பிரதான சாலையில், மல்லங்காட்டான் தெருவில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். கொண்டலாம்பட்டி போலீசார் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால், மக்கள் மறியலை கைவிட்டனர்.இதையடுத்து விபத்து ஏற்படுத்திய காடையாம்பட்டி, காத்தான் கொட்டாய், பூசாரிப்பட்டியை சேர்ந்த புவனேஸ்வரன், 20, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.