உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அறிவுரை வழங்கிய மூதாட்டியை கத்தியால் குத்தி கொன்ற சிறுவன் தடயத்தை மறைத்த தாயும் சிக்கினார்

அறிவுரை வழங்கிய மூதாட்டியை கத்தியால் குத்தி கொன்ற சிறுவன் தடயத்தை மறைத்த தாயும் சிக்கினார்

வீரபாண்டி:மூதாட்டி கொலை வழக்கில் 17 வயது சிறுவன், அவனது தாயை போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம், சீரகாபாடி, மதுரையான்காட்டில் தனியே வசித்த சின்னத்தாயி, 88; கடந்த 26 இரவு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது மகள் சின்னரசி புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், மூதாட்டி வீடு அருகே ஒருவர் வந்து சென்றதும், அவரது கையில் துணியால் சுற்றப்பட்ட பொருளை எடுத்துச்சென்றதும் பதிவாகியிருந்தது.அவர், மூதாட்டி வீடு அருகே வசிக்கும், பிளஸ் 1 படிக்கும் 17 வயது மாணவர் என, தெரிந்தது. விசாரணைக்கு பின், சிறுவன், அவனது தாயை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது:சிறுவனின் தந்தை, 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். சிறுவனின் தாய், ஏழு ஆண்டுகளாக அரியானுாரில் ஹோட்டல் நடத்துகிறார். சின்னத்தாயி, அக்கம் பக்கத்தினரிடம் சகஜமாக பேசுவார். சிறுவன் வீட்டுக்கு அவர் சென்ற போது, பள்ளி செல்லாமல் இருந்ததை கண்டித்துள்ளார். சில நேரம், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் மத்தியில் சிறுவனை திட்டி, சின்னத்தாயி அறிவுரை வழங்கியுள்ளார்.ஆத்திரமடைந்த சிறுவன், ஹோட்டலில் இறைச்சி வெட்ட பயன்படுத்தும் கத்தியால், மூதாட்டியை குத்திக் கொன்றுள்ளார். வீட்டுக்கு வந்த அவரது சட்டையில், ரத்தக்கறை இருந்தது. அவரது தாய் கேட்டபோது, சின்னத்தாயை கொன்றதை ஒப்புக்கொண்டார். தடயங்களை மறைத்துவிட்டு, மகனை அழைத்துக்கொண்டு அவர் புதுச்சேரி சென்றார். இருவரையும் கைது செய்து, தாயை சிறைக்கும், மகனை அரசு காப்பகத்துக்கும் அனுப்பியுள்ளோம்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ