சேலம்: ''மத்தியில் நம்முடைய அரசாக, மக்களுடைய அரசாக இருக்க வேண்டும்,'' என, எம்.பி., கனிமொழி பேசினார்.லோக்சபா தேர்தலுக்கு, தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், சேலத்தில் ஐந்து ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில், நேற்று கருத்து கேட்பு நிகழ்ச்சி நடத்தினர். எம்.பி., கனிமொழி தலைமை வகித்தார். சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த பால் உற்பத்தியாளர், வியாபாரிகள், விவசாயிகள், சிறு குறு தொழில் முனைவோர், கோழி பண்ணையாளர், லாரி உரிமையாளர், கட்சியினர், மக்களிடம், மனுக்களை பெற்றனர்.முன்னதாக கனிமொழி பேசியதாவது: மத்திய அரசு, தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் செய்து கொண்டே உள்ளது. வெள்ள நிவாரணத்தை கூட அளிக்க மறுக்கும் சூழல் இருக்கிறது. வரும் தேர்தலில் மத்திய அரசு நம்முடைய அரசாக, மக்களுடைய அரசாக இருக்க வேண்டும். அது உங்கள் கைகளில் தான் உள்ளது. மாநில உரிமைகளை மதிக்கக்கூடிய அந்த மாநில மக்களை, மொழியை, அவர்களின் உணர்வுகளை மதிக்கக்கூடிய ஒரு அரசை உருவாக்க வேண்டும். இந்த உணர்வோடு தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு கனிமொழி பேசினார்.சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, விவசாய அணி செயலர் விஜயன், வர்த்தகர் அணி துணை தலைவர் கோவி செழியன், மாணவர் அணி செயலர் எழிலரசன், எம்.பி.,க்கள் ராஜேஷ்குமார், அப்துல்லா, எம்.எல்.ஏ., எழிலன், தி.மு.க.,வின் சேலம் மாவட்ட செயலர்கள் ராஜேந்திரன், சிவலிங்கம், மேயர் ராமச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.