தொடர்ந்து கழிவுநீர் தேங்கியதால் திறக்கப்படாத வி.ஏ.ஓ., அலுவலகம்
தாரமங்கலம், தாரமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே வி.ஏ.ஓ., அலுவலகம் செயல்படுகிறது. அதை சுற்றியுள்ள வீடு, கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், அந்த அலுவலக பின்புறம் உள்ள பட்டா நிலத்தில், சாக்கடையில் செல்கிறது. இதில் கடந்த, 14 மதியம் பெய்த மழையால், பட்டா நிலத்தில் உள்ள சாக்கடையை அடைத்துவிட, அங்கு செல்ல வழியின்றி, மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து, வி.ஏ.ஓ., அலுவலகம் முழுதும் தேங்கியது. இதனால் அன்று அலுவலகத்தை பூட்டிச்சென்றனர்.தொடர்ந்து கழிவுநீர் தேங்கி இருந்ததால், 3 நாட்கள் அரசு விடுமுறை முடிந்தும் நேற்று முன்தினமும், நேற்றும், வி.ஏ.ஓ., அலுவலகம் திறக்கப்படவில்லை. இதனால் வி.ஏ.ஓ., அவரது உதவியாளர், அருகே உள்ள, ஆர்.ஐ., அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்றினர். இருப்பினும் சிலர் வந்துவிட்டு, அலுவலகம் பூட்டி இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.இந்நிலையில் நேற்று அங்கு வந்த ஓமலுார் தாசில்தார் ரவிக்குமார், நகராட்சி கமிஷனர் பவித்ரா(பொ), பட்டா நில உரிமையாளரிடம், 3 மாதங்களுக்கு சாக்கடையை அடைக்க வேண்டாம் என்றும், அதற்குள் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிச்சென்றனர்.