| ADDED : மே 06, 2024 12:22 AM
காரைக்குடி : காரைக்குடி செஞ்சையில், மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்த செஞ்சை ஊரணி பராமரிப்பின்றியும், வரத்துக் கால்வாய்கள் காணாமல் போனதாலும் மைதானமாக காட்சியளிக்கிறது.காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட செஞ்சை 31 வார்டு செஞ்சை ஊரணி உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கியது. ஊரணிக்கு, தண்ணீர் வரும் முக்கிய வரத்து கால்வாய்கள் தடைபட்டு தண்ணீர் வரத்து நின்று போனது. வரத்து கால்வாய்களை சீரமைக்க பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஊரணி தூர்வாரப்படவில்லை. தவிர, சுற்று பகுதியில் உள்ள சாக்கடை கழிவுகள் ஊரணிக்குள் விடப்பட்டு கழிவுநீர் குளம் போல் காட்சியளித்தது. செஞ்சை பகுதியில் உள்ள, தங்கும் விடுதிகளுக்கு வெளிநாட்டினரும் பிரபல சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்களும் வந்து செல்கின்றனர்.செஞ்சை ஊரணியின் தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்டு மைதானம் போல் காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் ஆதாரமும் குறைய வாய்ப்புள்ளது. எனவே, ஊரணியை தூர்வாரி, ஊரணியை சுற்றிலும் நடைபாதை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.