| ADDED : மே 07, 2024 05:21 AM
சிவகங்கை: சிங்கம்புணரி சேவுக பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி திருவிழா மே 12 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மே 20ம் தேதி தேரோட்டம் நடைபெறும்.சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சிங்கம்புணரி சேவுக பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி திருவிழா மே 12 ல் மதியம் 1:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினமும் சுவாமி காலையில் வெள்ளி கேடகத்திலும், இரவு கேடயம், வெள்ளி மூஷிகம், அனுஷம், சிம்மம், பூதம், வெள்ளி ரிஷபம், வெள்ளி கேடயத்தில் வலம் வருகிறார். விழாவின் 5 ம் நாளான மே 16 அன்று இரவு 7:00 முதல் 8:00 மணிக்குள் திருக்கல்யாணம், அனந்த சயனம் நடைபெறும். விழாவின் 9ம் நாளான மே 20 அன்று மதியம் 2:00 முதல் 3:00 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருள்வார்.அதனை தொடர்ந்து பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெறும். பக்தர்கள் தேரடியில் தேங்காய் உடைத்தும், பழங்களை வீசியும் நேர்த்தி செலுத்துவர். விழாவின் 10 ம் நாளான மே 21 அன்று காலை தீர்த்தவாரி உற்ஸவம், இரவு புஷ்ப பல்லக்கில் எழுந்தருள்வார். தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கோயில் கண்காணிப்பாளர் ஜெய்கணேசன், அடைக்கலங்காத்த நாட்டார்கள் பரம்பரை ஸ்தானிக சிவாச்சாரியார்கள் விழா ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.