| ADDED : ஜூன் 16, 2024 02:03 AM
கீழடி:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி 10ம் கட்ட அகழாய்விற்கு தமிழக அரசு 30 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.தமிழகம் முழுவதும் கீழடி, கங்கை கொண்ட சோழபுரம், வெம்பக்கோட்டை உள்ளிட்ட எட்டு இடங்களில் இந்தாண்டு அகழாய்வு பணிகள் தொடங்க உள்ளன. பத்தாம் கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை இரு தளங்களிலும் நடைபெற உள்ளது. அகழாய்வு பணிகளுக்கு தேவையான கருவிகள், அளவீடு பணிகள், அகழாய்வில் எடுத்த பொருட்களை ஆய்விற்கு அனுப்ப என செலவு அதிகம். ஆனால் கீழடி, வெம்பக்கோட்டையில் ஏற்கனவே அகழாய்வு நடந்து வருவதால் கருவிகள் உள்ளன. எனவே இந்தாண்டு பத்தாம் கட்ட அகழாய்விற்கு 30 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தொல்லியல் துறையினர் கூறுகையில், அகழாய்வில் கிடைக்கும் பொருட்களை கார்பன் டேட்டிங்கிற்கு அமெரிக்காவிற்கு தனியாக அனுப்பினால் செலவு அதிகம் ஆகும். எனவே அகழாய்வு பணியில் கண்டறியப்பட்ட முக்கியமான பொருட்களை சென்னையில் உள்ள தொல்லியல் துறை தலைமையகத்திற்கு சோதனைக்கு அனுப்பி விடுவோம்.அங்கிருந்து அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்புவார்கள். எனவே அதற்கு இந்த நிதி தேவைப்படாது. கூலி தொழிலாளர்கள் மற்றும் பொருட்களை ஆவணப்படுத்தும் பணிக்காக மட்டுமே தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றனர்.