தமிழகத்தில் 5.56 லட்சம் டன் தர்பூசணி பழங்கள் விளைச்சல்
சிவகங்கை : தமிழகத்தில் கோடை சீசனில் 5.56 லட்சம் டன் தர்பூசணி விளைவிக்கப்பட்டு, விற்பனைக்கு வருவதாக தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அதிகஅளவில் தர்பூசணி சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் நடவு செய்து தர்பூசணி கொடியில் இருந்து ஏக்கருக்கு 8 முதல் 10 டன் பழங்கள் விளைகின்றன. தமிழகஅளவில் ஒவ்வொரு சீசனுக்கும் 5 லட்சத்து 56 ஆயிரத்து 221 டன் தர்பூசணி அறுவடை செய்யப்படுகிறது. இவை ஆண்டுதோறும் டிசம்பர்முதல் பிப்., வரை விதைக்கப்பட்டு, கோடை காலமான மார்ச் முதல் மே வரை அறுவடை செய்யப்படும்.கோடை காலங்களில் இந்த பழத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் தர்பூசணியில் ரசாயனம் கலக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து தோட்டக்கலை அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் மூலம் தர்பூசணி பழங்களில் எந்தவித செயற்கை ரசாயனத்தை ஊசி மூலம் செலுத்தவில்லை என உறுதி செய்தனர். தோட்டக்கலை இயக்குனரக அதிகாரி கூறியதாவது: கோடையில் விவசாயிகள் பயிரிட்டுள்ள தர்பூசணி பழத்தை மாநில அளவில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தோம். அதில் எந்தவித ரசாயனமும் கலக்கப்படவில்லை. பொதுமக்கள் கோடை உஷ்ணத்தை தணிக்க, இந்த பழத்தை வாங்கி சாப்பிடலாம், என்றார்.