மேலும் செய்திகள்
ஒரு போன் போதுமே..!
11-Aug-2025
மானாமதுரை: மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதி வீடுகளுக்கு வினியோகிக்கப்பட்ட குடிநீர், வெண்நுரையுடன், அசுத்தமாக வந்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்னர். தெளிவான நீரை வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் 4,500 குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன. தினமும் காலை நகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர். ராஜகம்பீரம் வைகை ஆற்றில் ஆழ்துழாய் கிணறுகள் அமைத்து, மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் ஏற்றி, வீடுகள், வர்த்தக நிறுவனங்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனர். இக்குடிநீர் திட்டத்திற்காக 40 ஆண்டிற்கு முன் போடப்பட்ட குழாய்கள் சேதமடைந்து, உடைப்பு ஏற்பட்டது. இதனால், புதிய குடிநீர் குழாய் பொருத்துவதற்காக ரூ.39 கோடியில் புதிய குழாய்கள் பொருத்தியும், வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கியும் வருகின்றனர். * நுரையுடன் வந்த குடிநீர்: புதிய குடிநீர் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கி வருகின்றனர். நேற்று பெருமாள் கோயில் தெருவில் உள்ள வீடுகளுக்கு வினியோகிக்கப்பட்ட குடிநீர் அசுத்தமான முறையில் வெண்நுரையுடன் காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து ஒவ்வொரு பகுதியிலும் அசுத்தமான குடிநீரே வினியோகம் செய்வதால் குடிநீரால் நோய் தொற்று பரவும் அச்சத்தில் தவிக்கின்றனர். நகராட்சி நிர்வாகம் சுகாதாரமான குடிநீர் மக்களுக்கு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது, புதிய குடிநீர் குழாய் பொருத்தும் பணி முடியும் தருவாயில் உள்ளது. நேற்று முன்தினம் பெய்த மழை காரணத்தால், குழாய்களில் மழை நீர் தேங்கி, நுரையுடன் வந்திருக்கலாம். அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம், என்றனர். ///
11-Aug-2025