மடப்புரம் கோயில் வளாகத்தில் கூடுதல் கடையால் பக்தர்கள் அவதி
திருப்புவனம் : மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் வளாகத்தில் கூடுதலான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கடைகளால் பக்தர்கள் சிரமப்பட்டனர். ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியன்று ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மதுரை, சிவகங்கையில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.ஆடி முதல் வெள்ளியன்று பக்தர்கள் விலக கூட இடம் இல்லாத நிலையில் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தது குறித்து பக்தர்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த வாரம் கூடுதலாக மேலும் ஒரு இடத்தில் கடை அமைக்க அனுமதி அளித்துள்ளனர். இதனால் பிரகாரத்தின் நான்கு புறமும் அமைக்கப்பட்டுள்ள கடைகளால் பக்தர்கள் கடும் சிரமம் அடைந்தனர். அம்மனை தரிசிக்க நின்ற பக்தர்களை வியாபாரத்திற்கு இடையூறாக நிற்பதாக கூறி கடைகளில் இருந்தவர்கள் விரட்டியடித்தனர். இதனால் பக்தர்கள் வேதனையுடன் கிளம்பி சென்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மடப்புரம் கோயில் பிரகாரத்தில் கடைகள் அமைப்பதை தடை செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.