தி.மு.க., மாவட்ட நிர்வாகி பட்டப்பகலில் வெட்டி கொலை
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சாமியார்பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார், 27; தி.மு.க.,வில் சிவகங்கை மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளராக இருந்தார். ரியல் எஸ்டேட், கட்டட கான்ட்ராக்டர் தொழில் செய்து வந்தார். நேற்று மதியம், 3:00 மணிக்கு சாமியார்பட்டியில் உள்ள அவரது தோப்பிற்கு சென்றார். அப்போது, டூ - வீலரில் சென்ற கும்பல், அரிவாளால் பிரவீன்குமாரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பிரவீன் குமாரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினர்கள் மானாமதுரை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். எஸ்.பி., ஆஷிஷ் ராவத் விசாரித்தார். முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக, சாமியார்பட்டி கருணாகரன், 20, சிவகங்கை, காளவாசல் பிரபாகரன், 19, திருப்புத்துார், நரசிங்கபுரம் குரு, 21, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.