| ADDED : ஜன 08, 2024 06:19 AM
திருப்புவனம் : திருப்புவனத்தில் செயற்கை மின்வெட்டு ஏற்படுத்தி மணல் திருட்டு நடப்பதாக மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.திருப்புவனத்தில் நகரில் மட்டுமே 15,000 மின் இணைப்பு உள்ளன. நகரில் உள்ள மின் கம்பங்களில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் நவீன பாலிமர் வகை இன்சுலேட்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.ஆனாலும் குறிப்பிட்ட நாட்களில் நள்ளிரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு காலையில் தான் மீண்டும் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்கு மணல் கடத்தல் கும்பல் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அரசு மணல்குவாரிகள் ஏதும் இல்லை. கட்டுமான பணிகளுக்கு முழுக்க முழுக்க எம்சாண்ட் வகை மணல்தான் பயன்படுத்தப்படுகிறது.ஆனால் கட்டடம் உறுதியாக இருப்பதற்கு சென்ட்ரிங் பணி, தூண் அமைக்கும் பணிக்கு ஆற்று மணல் தேவை என்பதால் கட்டடம் கட்டுபவர்கள் பலரும் கூடுதல் விலை கொடுத்து ஆற்று மணல் வாங்க விரும்புகின்றனர்.இவர்களை குறி வைத்து திருப்புவனத்தில் பலரும் சட்டவிரோதமாக வைகை ஆற்றை ஒட்டியும், கால்வாய்களிலும் மணல் திருடி குவித்து வைத்துள்ளனர்.நான்கு தட்டு அளவு கொண்ட மணல் மூடை 40 முதல் 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இரவில் குவித்து வைக்கும் மணல் கடத்தல் கும்பல் மின்வெட்டு நேரத்தில் மினிவேன்களில் மணலை கடத்துகின்றனர்.வைகை ஆற்றில் நீர்வரத்து காரணமாக ஏற்கனவே மணல் அள்ளிய பள்ளங்களில் மணல் மீண்டும் நிரம்பியுள்ளது. எனவே அவற்றை சாக்கு மூடைகளில் அள்ளி விற்பனை செய்கின்றனர்.போலீசார் கெடுபிடி அதிகமாக இருப்பதாலும் டூவீலர்களில் மணல் கொண்டு சென்றாலே வழக்கு பதிவு செய்வதுடன் டூவீலர்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.எனவே மணல் கடத்தல் கும்பல் நகரில் முக்கிய இடங்களில் சென்ட்ரிங் பணிகளின் போது மினி சரக்கு வேன்களில் ஆற்று மணலை கடத்துகின்றனர். சி.சி.டி.வி., கேமரா மற்றும் போலீசாரின் கண்களில் இருந்து தப்பிக்க மின்கம்பிகளின் மீது ஈரமான சாக்கு, இரும்பு கம்பிகளை வீசி செயற்கையாக மின் தடையை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.மின்வாரிய ஊழியர் பற்றாக்குறையால் இரவில் பழுது ஏற்பட்ட இடத்தை கண்டறியவும் நீண்ட நேரம் ஆவதால் மணல் கடத்தல் கும்பலுக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது.