மேலும் செய்திகள்
ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்
26-Dec-2024
சிவகங்கை: சிவகங்கை அருகே கண்டுபட்டி பழைய அந்தோணியார் கோவில் தை பொங்கல் விழாவை முன்னிட்டு ஜன.,18ல் நடக்கும் மஞ்சுவிரட்டில் 150க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தை 5 ம் தேதி கண்டுபட்டி பழைய அந்தோணியார் கோயிலில் ஹிந்துக்களால் பொங்கல் விழா நடத்தப்படும். இந்த ஆண்டிற்கான பொங்கல் விழா ஜன.,18ல் (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்காக பொட்டலில் தடுப்பு, பார்வையாளர் அமர கேலரி அமைக்கும் பணியை விழாக்குழுவினர் துவக்கியுள்ளனர். பழைய அந்தோணியார் கோயிலில் பக்தர்கள்பொங்கல் வைத்தும், கரும்பு தொட்டில் சுமந்தும்நேர்த்திக்கடன் செலுத்துவர். அன்று மதியம் 2:00 மணிக்கு பழைய அந்தோணியார் கோயிலில் இருந்து பரிவட்டங்களை எடுத்துக்கொண்டு, கிராம கமிட்டியினர் ஊர்வலமாக மஞ்சுவிரட்டு பொட்டலுக்கு வருவார்கள். அதற்குபின் காளைகள்ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்படும். அதற்கு முன்னதாக காலை 11:00 மணியில் இருந்தே பொட்டலில் ஆங்காங்கே நுாற்றுக்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்படும்.காளைகளை அடக்க நுாற்றுக்கணக்கான மாடு பிடி வீரர்கள் வருகை தருவர். பொங்கல் விழாவை முன்னிட்டு அன்றைய தினம் புதிய அந்தோணியார் கோயில் முன்பும் பக்தர்கள் பொங்கல் வைத்தும், செங்கரும்பு தொட்டில் சுமந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர். மஞ்சுவிரட்டு மற்றும் பொங்கல் விழாவிற்கு வெளியூர்களில் இருந்து வரும் மக்களுக்கு உணவு அளிக்கும் விதமாக அனைவர் வீடுகளிலும் சைவ உணவு தயாரித்து பரிமாறப்படும். இந்நடைமுறையை கண்டுபட்டி கிராம மக்கள் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக கடைபிடித்து வருகின்றனர். கண்டுபட்டி கிராம கமிட்டி தலைவர் சக்திதாசன் தலைமையில் கமிட்டியினர் மஞ்சுவிரட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
26-Dec-2024