உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி துணை மேயர் உள்ளிட்ட 24 கவுன்சிலர்கள் ஆப்சென்ட்

காரைக்குடியில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி துணை மேயர் உள்ளிட்ட 24 கவுன்சிலர்கள் ஆப்சென்ட்

காரைக்குடி:காரைக்குடி மேயர் முத்துத்துரைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மான ஓட்டெடுப்பில் துணைமேயர் உட்பட பல கவுன்சிலர்கள் வரவில்லை. போதுமான கவுன்சிலர்கள் இல்லாத நிலையிலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக கமிஷனர் சங்கரன் தெரிவித்தார். காரைக்குடி மாநகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில், தி.மு.க., 18, அ.தி.மு.க., 7, காங்., 3, இ.கம்யூ.,1, சுயேச்சை 7 பேர். 14 வது வார்டு கவுன்சிலர் ராஜினாமா செய்த நிலையில் 35 கவுன்சிலர்கள் உள்ளனர். தி.மு.க.,வை சேர்ந்த முத்துத்துரை மேயராகவும், தி.மு.க., நகரச் செயலாளர் குணசேகரன் துணை மேயராகவும் உள்ளனர். முத்துத்துரை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக்கோரி குணசேகரன் தலைமையில் கவுன்சிலர்கள் கமிஷனர் சங்கரனிடம் மனு அளித்தனர். மனுவில் தி.மு.க., காங்., அ.தி.மு.க., கம்யூ., சுயேச்சை உட்பட 24 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டனர். ஆனால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படவில்லை. 22 வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் ராம்குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். மனு அளித்த தேதியில் இருந்து, 30 நாட்களுக்குள் மாநகராட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும், விதிகளின்படி ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 7 பேர், ஒரு சுயேச்சை கவுன்சிலர் என 8 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். மேயர், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு தலைமையேற்ற துணை மேயர் குணசேகரன் உட்பட 16 கவுன்சிலர்களும் வரவில்லை. ஓட்டெடுப்பு நடத்த தேவையான 5 ல் 4 பங்கு கவுன்சிலர்கள் இல்லாததால், ஓட்டெடுப்பு தோல்வி அடைந்ததாக தெரிவித்தார். இந்நிலையில் மேயர், துணை மேயர்களின் அலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு

போதிய கோரம் இல்லாததால் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக கமிஷனர் அறிவிக்கிறார். கூட்டமும் நடத்தவில்லை, பேசவும் அனுமதிக்கவில்லை. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். -ராம்குமார் அ.தி.மு.க., கவுன்சிலர்

ஓட்டெடுப்பு தோல்வி

நீதிமன்ற உத்தரவின்படி, நம்பிக்கை இல்லா தீர்மான ஓட்டெடுப்பு கூட்டம் நடந்தது. 5 ல் 4 பங்கு கவுன்சிலர்கள் இருக்க வேண்டும். கோரம் இல்லாததால், நம்பிக்கை இல்லா ஓட்டெடுப்பு தோல்வி அடைந்தது - சங்கரன் கமிஷனர்

சிறுமலையில் கவுன்சிலர்கள்

மும்பை தி.மு.க., பொறுப்பு குழு தலைவர் சேசு ராசு, தனது சமூக வலைதள பக்கத்தில் சிறுமலையில் கருணாநிதிக்கு காரைக்குடி கவுன்சிலர்கள் அஞ்சலி செலுத்தியதாக படம் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை