சேதமடைந்த கட்டடத்தில் வகுப்பு மாணவர்கள் பாதிக்கும் அபாயம்
காரைக்குடி: சாக்கோட்டை அருகே வீரசேகரபுரத்தில் சேதமடைந்த ஓட்டுக்கட்டடத்தில் பள்ளி செயல்படுவதால் மாணவர்களுக்கு அபாயம் நிலவுவதாக பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர். சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வீரசேகரபுரம் ஊராட்சியில் சொக்கலிங்கபுரம், கருநாவல்குடி, எசலி குடியிருப்பு உட்பட 8க்கும் மேற்பட்ட சிற்றுார்கள் உள்ளன. இவ்வூராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வீரசேகரபுரத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இங்கு 25 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு, புதிய மற்றும் பழைய கட்டடத்தில் வகுப்புகள் செயல்பட்டு வருகிறது. ஓட்டுக் கட்டடத்தில் சுற்றுச் சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் வகுப்பறைக்குள் கசிந்து விழுகிறது. ஓட்டு கட்டடத்தை அகற்றி புதிய கான்கிரீட் கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெற்றோர்கள் கூறுகையில்: சேதமடைந்த ஓட்டுக்கட்டடத்தில் பல ஆண்டுகளாக வகுப்பு செயல்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே விழுகிறது. விரிசல் விழுந்த கட்டடத்தால் மாணவர்களுக்கு அபாயம் நிலவுகிறது. பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மாணவர்களின் பாதுகாப்பு கருதி புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.