| ADDED : ஜன 17, 2024 12:32 AM
மானாமதுரை ; மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் மீன்களை பிடிப்பதற்காக வலைகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றன.தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த வடகிழக்கு பருவமழை மற்றும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக மானாமதுரை மற்றும் இளையான்குடி பகுதிகளில் உள்ள கண்மாய்கள், ஏரிகள், நீர் நிலைகளில் தண்ணீர் நிறைந்துள்ளன.மேலும் வைகை அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதினால் மானாமதுரை வைகை ஆற்றிலும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதையடுத்து நீர் நிலைகளில் மீன்களும் அதிகளவில் இருப்பதினால் அதனை ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு பிடித்து வருகின்றனர்.வைகை ஆறு மற்றும் கண்மாய், நீர்நிலைகளில் அயிரை, கெளுத்தி, விரால், ஜிலேபி கெண்டை குரவை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை ஏராளமானோர் தூண்டில் மற்றும் சேலை,வேஷ்டி, வலைகளை பயன்படுத்தி பிடித்து வருகின்றனர்.இந்நிலையில் மீன்களை மிக சுலபமாக பிடிக்கும் வகையில் மானாமதுரை மற்றும் இளையான்குடி பகுதிகளில் வலை விற்பனையாளர்கள் ஏராளமான வகைகளில் வலைகளை ரூ. 200 முதல் ரூ.800 வரை விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து விற்பனையாளர் குமார் கூறியதாவது, இந்த வருடம் தென் மாவட்டங்களில் அதிகளவு மழை பெய்ததை தொடர்ந்து நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கியதால் மீன்கள் அதிக அளவில் கிடைக்க துவங்கியுள்ளன. இதனை பிடிப்பதற்காக ஏராளமானோர் வலைகளை வாங்குவதால் ஊர், ஊராக சென்று விற்று வருகிறோம். ஏராளமானோர் மீன்களை பிடித்து வருவதால் வலை விற்பனை அமோகமாக நடக்கிறது, என்றார்.