பள்ளி மைதானத்திற்குள் கொட்டப்படும் தார் கழிவு
மானாமதுரை: மானாமதுரையில் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் தார் ரோடு கழிவுகள் மற்றும் கட்டுமான பொருட்களை கொட்டி வைப்பதினால் மாணவர்கள் மற்றும் நடை பயிற்சிக்கு செல்பவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மானாமதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் ரோட்டில் சி.எஸ்.ஐ., அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் பின்புறம் விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் நடைபெறும் ரோடு மற்றும் பல்வேறு கட்டடப் பணிகளுக்கு தேவைப்படும் ஜல்லி, மணல், சிமென்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை மைதானத்தில் கொட்டி வைத்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக ரோடு போடுவதற்காக பழைய தார் ரோடுகளை தோண்டி எடுத்த கழிவுகளையும் மைதானத்திற்குள் கொட்டி வைப்பதால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.