மானாமதுரை பாரத ஸ்டேட் வங்கியில் போலி நகை அடகு வைக்க முயற்சி தாய், மகள் உட்பட 3 பேர் கைது
மானாமதுரை:சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாரத ஸ்டேட் வங்கியில் போலி(தரம் குன்றிய தங்கம்) நகைகளை அடகு வைக்க முயன்ற தாய், மகள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.மானாமதுரை அருகே சமத்துவபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முருகன் மனைவி கோட்டையம்மாள் 55. இவரது மகளான திருப்புவனம் மடப்புரத்தைச் சேர்ந்த ஈஸ்வரி மற்றும் மதுரை நிலையூர் கண்ணன் மகன் ஜனார்த்தனன் 32, ஆகியோர் பாரத ஸ்டேட் வங்கியில் 116 கிராம் எடையுள்ள தங்க நகைகளை அடகு வைக்க வந்தனர். நகை மதிப்பீட்டாளர் நகைகளை பரிசோதித்த போது தங்கத்தின் தரம் குறைந்திருப்பது தெரிந்தது. மேலும் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.கோட்டையம்மாள் கடந்தாண்டு ஜன.,20ல் 72 கிராம் தங்க நகைகளை ரூ3.75 லட்சத்திற்கும், 61 கிராம் நகைகளை ரூ.3.50 லட்சத்திற்கும், கடந்த மாதம் 17 ல் 112 கிராம் நகைகளை ரூ.5.34 லட்சத்திற்கும், ஜன., 28ல் 6.97 லட்சத்திற்கும் என மொத்தம் ரூ. 36.37 லட்சத்திற்கு அடகு வைத்துள்ளார். அவற்றையும் பரிசோதித்த போது தரம் குன்றியிருந்தது தெரிய வந்தது.போலி நகைகளை அடகு வைத்ததாக வங்கி மேலாளர் ஜான்சி ராணி போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து தாய், மகள் உட்பட மூவரையும் போலீசார் கைது செய்தனர்.தேசிய மயக்கமாக்கப்பட்ட வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது: இம்மோசடி கும்பலுக்கு தமிழகம் முழுதும் நெட்வொர்க் உள்ளது. இவர்கள் மதுரை, கோவை, சென்னை பகுதிகளில் உள்ள நகை ஆபரணங்களை செய்வோரிடம் தரம் குறைந்த நகைகளை வாங்கிக்கொண்டு அதாவது 100 சதவீத தங்கத்தில் 40 சதவீதம் வரை அரக்கு போன்ற பொருட்களை உள்ளே வைத்து விடுவர். வெளியே பார்க்கும் போது சுத்தமான தங்க நகைகள் போன்று இருக்கும். நகை மதிப்பீட்டாளர்களும் கண்டுபிடிக்க முடியாது. பெரும்பாலும் இந்த நகைகள் ஆரம், இரட்டை வட செயின், டாலர் போன்ற குறிப்பிட்ட டிசைன்களில் மட்டுமே இருக்கும். போலி நகைகளை அடகு வைத்து பணத்தை பெற்று அதனை திரும்ப செலுத்துவதில்லை.இச்சம்பவம் எதிரொலியாக அனைத்து வங்கிகளிலும் இதுபோன்ற டிசைன்களில் உள்ள நகைகளை வங்கி அதிகாரிகள் நவீன இயந்திரங்களை கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர் என்றார். போலீசார் கூறியதாவது: கைதானவர்களிடம் விசாரணை நடக்கிறது. விரைவில் மேலும் பலர் கைது செய்யப்படுவர் என்றனர்.