சங்கரன்கோவில் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
தென்காசி:சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.தென்காசிமாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் சைவமும் வைணவமும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. ஆடித்தபசு விழா பிரசித்தி பெற்றது. இங்கு கடந்த 2008ல் கும்பாபிஷேகம் நடந்தது. 2020ல் நடத்தப்பட வேண்டிய கும்பாபிஷேகம் கொரோனா காலத்தில் தள்ளிப்போனது. 2022 ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொள்ள பாலாலயம் நடந்தது. திருப்பணிகள் முடிக்கப்பட்டு யாகசாலைகள் பூஜைகள் கடந்த 21 ல் தொடங்கியது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு 6ம் கால யாகசாலை தொடங்கியது. திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் தலைமையில் வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க , திருமுறை பாராயணம் பாடப்பட்டு காலை 8:00 மணிக்கு புனித நீர் கடம் புறப்பட்டு கோயில் உட்பிரகாரம் வலம் வந்து கோபுரத்தை அடைந்தது. பின்னர் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டுகோமதி அம்பிகை சமேத சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயணசுவாமி விமானம் மற்றும் ராஜ கோபுர மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோயிலில் சிறப்பு பூஜை, அபிேஷகம் , தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ.,க்கள் ராஜா, நயினார் நாகேந்திரன், பூமிநாதன், சதன் திருமலை குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எஸ். பி.,க்கள் சீனிவாசன்(தென்காசி), சிலம்பரசன் (திருநெல்வேலி) தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.