பட்டீஸ்வரம் கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து மூவர் படுகாயம்
தஞ்சாவூர்: பட்டீஸ்வரம் கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில், கோபிநாதபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷகத்திற்காக, கடந்த ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் நடந்து வருகின்றன. 6 அடி உயரம், 2 அடி அகலத்தில், சுற்றுச்சுவர் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடக்கிறது. இந்நிலையில், நேற்று திடீரென சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. சுற்றுச்சுவரின் அருகே நின்று கொண்டிருந்த, பட்டீஸ்வரத்தை சேர்ந்த தமிழ்மணி, 65, அவரது மனைவி தாமரை செல்வி, 50, இவர்களது பேரன் ஆனந்தகுகன், 3, ஆகியோர் மீது சுவர் இடிந்து விழுந்தது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர், விரைந்து சென்று, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசார் விசாரிக்கின்றனர்.