| ADDED : மே 04, 2024 05:51 AM
தேனி: சமீபகாலமாக தனியார் வாகனங்களில் பத்திரிகை, அரசு துறைகள், வழக்கறிஞர், காவல்துறை உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டுவது அதிகரித்து வருகிறது. இதனை போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்தபோது டூவீலர்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர்களுக்கும் வாகனம் ஓட்டுபவர்களுக்கு சம்பந்தம் இல்லாதது தெரிந்தது.சிலர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் இம்மாதிரியான ஸ்டிக்கர்களை ஒட்டி போலீசாரின் கவனத்தை திசை திருப்பியுள்ளது தெரியவந்தது. இதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்களின் மதிப்பை வலுப்படுத்தவும், சென்னையில் போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் சுதாகர் சுற்றறிக்கை வெளியிட்டார்.அதில், தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். இதனால் தேனி மாவட்ட போக்குவரத்து போலீசாரும் ஆய்வுகளை துவக்கி, விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.