| ADDED : ஜூன் 15, 2024 07:04 AM
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி மளிகை கடையில் ரூ.2.70 லட்சம் திருடிய முந்தைய கோழிதிருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே, அரசிக்கடை பஸ்நிறுத்தப் பகுதியில் அப்பாஸ் மந்திரி 44, மளிகை கடை நடத்தி வருகிறார். கடையின் மாடியில் வீடு உள்ளது. ஜூன் 10 இரவில் மர்மநபர்கள் கடையை உடைத்து கல்லாவில் இருந்த ரூ.2.70 லட்சம் திருடி சென்றனர். போலீஸ் ஸ்டேஷன் அருகே திருடு போன சம்பவம் பொதுமக்களை மட்டுமல்ல போலீசாரையும் பீதியடையச் செய்தது. இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையில், எஸ்.ஐ., க்கள் வேல்மணிகண்டன், முருகேசன் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். முந்தைய காலங்களில் கோழி திருடிய சிறுவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் இருந்தது. அவர்களை ரகசியமாக கண்காணித்ததில், அதே ஊரைச் சேர்ந்த பள்ளிக்கு செல்லாத 15, 15,18 வயது முறையே சேர்ந்த 3 சிறுவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ. 65 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இவர்கள் மதுரை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.