| ADDED : ஆக 02, 2024 06:49 AM
கம்பம் : வருவாய் கிராமங்களை பிரிப்பதற்குரிய அரசாணையை வெளியிடவும் , பிரிப்பதற்கான பணிகளை துவக்கிட வருவாய் நிர்வாக ஆணையரகம் உத்தரவிட வேண்டும் என்று தேனி மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.தேனி மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ராமர் கூறியிருப்பதாவது :வருவாய் கிராமங்கள் மக்கள் தொகை, நிலப்பரப்பின் அடிப்படையில் அமைக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் வருவாய் கிராமங்கள் நீண்ட காலமாக பிரிக்கப்படவில்லை. இதனால் வி.ஏ.ஓக்கள் பணிச்சுமையால் அவதிப்படுகின்றனர்.தேனி மாவட்டத்தில் 107 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவை ஒவ்வொரு கிராமமும் குறைந்தது இரண்டாகவும், அதிகபட்சம் 5 கிராமங்களாகவும் பிரிக்க தகுதி உள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் அதிகபட்ச நிலப்பரப்பு 300 எக்டேர் உள்ளது. ஆனால் தேனி மேகமலை 8 ஆயிரம் எக்டேர், மயிலாடும்பாறை கடமலைக்குண்டு 8 ஆயிரம் எக்டேர் உள்ளது. தேனி 2 ஆயிரம் எக்டேர், மக்கள் தொகை லட்சக்கணக்கில் உள்ளது. கூடலூரில் நான்கு வி. ஏ. ஒ.. க்கள் இருக்கும் போது தேனிக்கு ஒரே ஒரு வி.ஏ.ஓ., பணியிடம் உள்ளது. ,முத்துலாபுரம், காமயகவுண்டன்பட்டி, தேவாரம், மார்க்கையன்கோட்டை, சீப்பாலக்கோட்டை, பண்ணைப்புரம் உள்ளிட்ட பெரிய கிராமங்கள் அதிகம் உள்ளன. இவற்றை இரண்டும் அதற்கும் மேலும் பிரிக்கலாம்.வருவாய் கிராமங்களை பிரிப்பதற்குரிய அரசாணை இதுவரை பிறப்பிக்கவில்லை. வருவாய் நிர்வாக ஆணையரகம் அதற்கான அரசாணையை பிறப்பிக்க வேண்டும். பிரிக்கும் பணிகளையும் உடனே துவக்கவும் உத்தரவிட வேண்டும். தேனி மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் பிரிக்கப்படும் போது தற்போதுள்ள 107 வருவாய் கிராமங்கள், 200 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது குறைந்தது 100 வி.ஏ.ஓ..க்கள் பணியிடங்களை புதிதாக உருவாக்க வேண்டும். ஏற்கெனவே 7 காலிப்பணியிடங்கள் உள்ளது. அதையும் சேர்த்து தேவைப்படும் பணியிடங்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.