UPDATED : மே 05, 2024 07:39 AM | ADDED : மே 05, 2024 05:14 AM
பெரியகுளத்தில் நுாற்றாண்டை கடந்த மாவட்ட அரசு மருத்துவமனை செயல்படுகிறது. இம் மருத்துவமனைக்கு தினமும் 700 வெளிநோயாளிகள், 200 உள்நயாளிகள் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இங்கு குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, சிசு தீவிர பராமரிப்பு பிரிவு, சீமாங் சென்டர், இருதயம் சிகிச்சை பிரிவு, டயாலிசிஸ் பிரிவு, புற்றுநோய் சிகிச்சை பிரிவு, உட்பட 30க்கும் அதிகமான சிகிச்சை பிரிவுகள் உள்ளன. இம் மருத்துவமனையில் 144 வது வார்டு குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் 12 படுகைகளில் குழந்தைகளுடன் தாய்மார்கள் தங்கினர். மே 1 ல் காலை 7:40 மணிக்கு, வார்டில் உள்ள பிளாஸ்டிக் மின்விசிறி தீப்பிடித்தது. நோயாளிகள் அலறியடித்து குழந்தைகளை துாக்கி கொண்டு வெளியேறினர். அங்கிருந்த ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து சரி செய்தனர். கடந்த டிச. 6 ல், பெண்கள் அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு வார்டு 168 ல் கூடுதல் படுக்கை வசதியுடனான தனிஅறையில் அதிகாலை 2:00 மணிக்கு மின் கசிவால் மின்விசிறியில் தீப்பிடித்தது. இதை நோயாளிகளில் ஒருவர் பார்த்து அலறி அங்கிருந்த 19 நோயாளிகள் வெளியேற்றினர்.கடந்தாண்டில் ஏ.சி.,யில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக பழைய மிஷின்கள் இருந்த அறையில் தீ பற்றி விபத்து ஏற்பட்டது. இம் மருத்துவமனையில் 13 மாதங்களில் 3 முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தரம் குறைந்த மின் சாதனங்கள்:மாவட்ட அரசு மருத்துவமனையின் பொதுப்பணித்துறை எலக்டிரிக்கல் பிரிவில் தரம் குறைவான ஓயர்கள், விலை மலிவான பிளாஸ்டிக் மின்விசிறிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தரம் குறைந்த மின் ஓயர்களில் கூடுதல் மின்சாரம் வரும் சமயங்களில் தீ பற்றுகிறது. பல மின்விசிறிகளில் 'காயல்பகுதி' வெடித்து தீ பிடிக்கிறது. தரம் குறைந்த பொருட்கள் பயன்படுத்துவது நோயாளிகளின் உயிரோடு விளையாடுவது போல் உள்ளது.மருத்துவஇணை இயக்குனர் ரமேஷ் பாபு கூறுகையில், ' வார்டில் தீ பிடித்ததற்கான காரணம் குறித்து எலக்ட்ரிக்கல் உதவி பொறியாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மின்விசிறிகளை அகற்றவும், பழைய மின் ஒயர்களை மாற்றுவும், நிரந்தரமாக எலக்ட்ரிசியன் பணியிடம் நிரப்பப்படும். தரமான பொருட்கள் வாங்குவதற்கு நிதி ஒதுக்க பரிந்துரை செய்யப்படும்', என்றார்.-