போடி : போடி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில், பிரதோஷத்தை முன்னிட்டு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் தரிசனம் பெற்றனர்.பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கைலாய கீழச் சொக்கநாதர் கோயில், மேலச் சொக்கநாதர் கோயில், திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.பெரியகுளம்: கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பெரியகுளம் பாலசுப்ரமணியர் கோயிலில் ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது.ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷம் பூஜை நடந்தது. இந்திராபுரித் தெருவில் தையல்நாயகி உடனுறை சிவனேஸ்வரருக்கும், நந்தீஸ்வரருக்கும் சிறப்பு பூஜை நடந்தது. ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் அதிகார நாகராஜருக்கும், நந்தி பகவானுக்கும் பால், பன்னீர், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், தேன் உட்பட 21 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மல்லிகைப்பூ, தாமரைப்பூ, ரோஜா பூ, அரளிப்பூ, பிச்சி பூ உள்ளிட்ட பூக்களை கொண்டு அதிகார நாகராஜருக்கும், சிவனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை டாக்டர் மகாஸ்ரீ ராஜன் செய்திருந்தார்.