| ADDED : ஆக 02, 2024 06:50 AM
கம்பம் : கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் குடிநீர் திட்ட மெயின் பகிர்மான குழாய்களை ரூ.20 கோடியில் புதுப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் பெரும்பாலான நகராட்சி, பேரூராட்சிகளுக்கு 50க்கும் மேற்பட்ட திட்டங்கள் மூலம் வாரியம் குடிநீர் சப்ளை செய்கிறது.லோயர்கேம்ப்பில் முல்லைப்பெரியாற்றில் பம்பிங் செய்து புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், ஓடைப்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், மார்க்கையன்கோட்டை, குச்சனூர் உள்ளிட்ட பேரூராட்சிகளுக்கும், ஊராட்சிகளுக்கும் விநியோகம் செய்து வருகிறது.லோயர்கேம்ப்பிலிருந்து கூடலூர் , கம்பம் வழியாக கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் பேரூராட்சிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யும் கேபிடி திட்டம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. அதில் கம்பத்திலிருந்து தேவாரம் வரை 24 கி.மீ. தூர மெயின் பகிர் குழாயை புதுப்பிக்க வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கென ரூ.20 கோடியில் மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் லோயர்கேம்ப் முதல் கம்பம் வரை பகிர்மான குழாய்கள் நல்ல நிலையில் இருப்பதால், அதில் எந்த மாற்றமும் செய்யவில்லை. கம்பத்திலிருந்து தேவாரம் வரை மட்டுமே பகிர்மான குழாய் புதுப்பிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.