உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வடிகால் வசதி இன்றி தெருவில் குளம் போல் தேங்கும் கழிவுநீர் ; உங்கள் ஊராட்சி ... வடிகால் வசதி இன்றி தெருவில் குளம் போல் தேங்கும் கழிவுநீர் அடிப்படை வசதி இன்றி சூலப்புரம் மக்கள் அவதி

வடிகால் வசதி இன்றி தெருவில் குளம் போல் தேங்கும் கழிவுநீர் ; உங்கள் ஊராட்சி ... வடிகால் வசதி இன்றி தெருவில் குளம் போல் தேங்கும் கழிவுநீர் அடிப்படை வசதி இன்றி சூலப்புரம் மக்கள் அவதி

போடி : போடி ஒன்றியம், சிலமலை ஊராட்சிக்கு உட்பட்ட முதலாவது வார்டு சூலப்புரத்தில் ரோடு, தெருவிளக்கு, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இன்றி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.சிலமலை ஊராட்சி, முதலாவது வார்டு சூலப்புரத்தில் முத்தாலம்மன் கோயில் தெரு, மேற்கு, வடக்கு,நடுத்தெருக்கள், இந்திரா காலனி, குதுவல் தெரு உள்ளிட்ட பகுதியில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. இக் கிராமத்தில் தெருக்கள் முறைப் படுத்தாமல் முறையான பாதை இருந்தும் ரோடு வசதி இல்லை. மெயின் ரோட்டில் கூட விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கியுள்ளது. அடிப்படை வசதிகள் செய்து தர ஊராட்சி நிர்வாகத்திடம் சூலப்புரம் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. ஊராட்சியின் நிலவும் பிரச்சினை குறித்து மக்கள் கூறியதாவது :

வீடுகளுக்குள் புகும் கழிவுநீர்

பால்பாண்டியன், சூலப்புரம்: முத்தாலம்மன் கோயில் கடைசி தெருவில் சாக்கடை வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சிறு குளம் போல தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதில் கொசு உற்பத்தியாக அருகே குடியிருப்போருக்கு பெரும் தொல்லையாக மாறி பெரும் சுகாதாரகேடு ஏற்படுகிறது. முறையான சாக்கடை வசதி இல்லாததால் மழைநீருடன் கழிவுநீரும் வீடுகளுக்குள் சென்று விடுகிறது. இதனால் மக்கள் சிரமம் ஏற்படுகிறது. சூலப்புரம் மெயின் ரோட்டில் இருந்து முத்தாலம்மன் கோயில் தெருவிற்கு செல்ல பாதை இருந்தும் ரோடு வசதி இல்லை. இதனால் டூவீலர், ஆட்டோ உள்ளிட்ட வானங்களில் செல்ல சிரமம் அடைந்து வருகின்றனர். சாக்கடை, ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.

சுகாதார வளாகம் சீரமைப்பு தேவை

கண்ணன், சூலப்புரம் : மெயின் ரோட்டில் உள்ள அங்கன்வாடி மையம் சேதம் அடைந்து பல மாதங்களாக சீரமைக்காததால் பயன்பாடு இன்றி உள்ளது. தூய்மை பாரத திட்டத்தின் கீழ் வடக்கு, தெற்கு தெருவில் பெண்களுக்கான சுகாதார வளாகங்கள் கட்டி முடித்தும் ஓராண்டிற்கு மேலாகியும் திறக்கப்படாமல் முட்புதர் ஆக்கிரமித்துள்ளது. பயன்பாடு இல்லாத கழிப்பிடத்தில் பாம்புகள்,விஷப்பூச்சிகள் உலா வருவதால் அருகே குடியிருக்கும் மக்கள் அச்சத்தில் வசிக்கின்றனர். குதுவல் பகுதியில் 42 வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். பட்டா கேட்டு பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் பட்டா கிடைக்கவில்லை. கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். வீட்டு மனை பட்டா வழங்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருளில் முழ்கும் கிராமம்

பி.கணேசன், சூலப்புரம்: தெருக்களில் மின்கம்பங்களின் அடிப்பகுதி அரிப்பு ஏற்பட்டு கீழே விழும் அளவிற்கு சேதம் அடைந்து உள்ளது. சூலப்புரம் மெயின் ரோட்டில் மின்கம்பம் இருந்தும் விளக்கு வசதி இல்லை. இரவில் கிராமமே இருளில் மூழ்குகிறது. பெண்கள் இரவில் செல்ல அச்சம் அடைந்து வருகின்றனர். சாக்கடை சுத்தம் செய்யாததால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு சாக்கடை வசதி இல்லாததால் பள்ளி அருகே தேங்கியுள்ளது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் மாணவர்கள் பாதிக்கின்றனர். பல தெருக்களில் பாதைகள் இருந்தும் ரோடு வசதி இல்லை. தெருக்களை முறைப்படுத்தி சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தர வேண்டும்.

விரைவில் ரோடு வசதி

ராமர், ஊராட்சி தலைவர், சிலமலை: ஊராட்சியில் குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. சாக்கடை வசதிக்கான பணிகள் நடந்து வருகிறது. விரைவில் ரோடு வசதி செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி