அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.10.60 லட்சம் மோசடி: மூவர் மீது வழக்கு
போடி:தேனி மாவட்டம் போடி அருகே சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த பட்டதாரியான சபிஜா என்பவருக்கு சுகாதார ஆய்வாளர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.10.60 லட்சம் மோசடி செய்த கம்பம் ரத்னாநகர் பிரகலாதன், கோவிந்தராஜ், சென்னை மகேஸ்வரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சில்லமரத்துப்பட்டி நேதாஜி தெருவை சேர்ந்தவர் அமுதா 45. இவரது மகள் சபிஜா; எம்.எஸ்.சி., படித்துள்ளார். இவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன் சுகாதார ஆய்வாளர் பணி வாங்கி தருவதாக கூறி கம்பம் ரத்னா நகரை சேர்ந்த உறவினர்கள் பிரகலாதன், கோவிந்தராஜன் ஆகியோர் ரூ.12 லட்சம் கேட்டுள்ளனர். இதனை நம்பி ரூ. 9 லட்சத்து 10 ஆயிரம் அமுதா கொடுத்துள்ளார். மூன்று மாதம் கழித்து பணியில் சேர்ந்து கொள்ளுமாறு சென்னை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர் பணிக்கான நியமன ஆணை என ஒன்றை கொடுத்துள்ளனர். மூன்று மாதம் முடிந்த நிலையில் எந்த அலுவலகத்தில் அந்த ஆணையை கொடுக்க வேண்டும் என அமுதா கேட்டுள்ளார். சென்னையில் உள்ள மகேஸ்வரியின் வங்கி கணக்கில் மீத பணத்தை செலுத்தினால் தான் வேலைக்கு சேர முடியும் என கூறி உள்ளனர். அதன்படி மேலும் ரூ. ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை மகேஸ்வரி வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார்.அதன் பின் விசாரித்ததில் பணிநியமன ஆணை போலியானது என தெரிந்தது. இம்மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அமுதா வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி பிரகலாதன், கோவிந்தராஜன், மகேஸ்வரி மீது போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.