கோயில்களில் தெப்பத் திருவிழா நடத்த பக்தர்கள் வலியுறுத்தல்
உத்தமபாளையம், : உத்தமபாளையம்,காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை, சின்னமனுார் பூலாநந்தீஸ்வரர் சிவகாமியம்மன் கோயில்களில் தெப்பத் திருவிழா நடத்த பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். தேனி மாவட்டத்தில் இந்த இரு கோயில்களும் மிக பிரசித்தி பெற்றவை. தென் காளஹஸ்தி என்றழைக்கப்படும் காளாத்தீஸ்வரர் கோயிலில் தெப்பத் திருவிழா கடைசியாக எப்போது நடந்தது என்பதே தெரியவில்லை. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்க வேண்டும் என்கின்றனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு இக் கோயில் திருப்பணி மேற்கொண்டபோது, தெப்ப பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டன. தமிழக அரசு சார்பில் ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது. உபயதாரர்களும் பணி செய்தனர். ஆனால் என்ன காரணத்தினாலோ பணிகள் கிடப்பில் போடப்பட்டது. தெப்பத் திருவிழா கானல் நீராக மாறியுள்ளது.அதே போன்று சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் கோயில் தெப்பத்திற்கு பெரிய வாய்க்காலில் இருந்து தண்ணீர் வருவதற்கு வாய்க்கால் வசதி உள்ளது. ஆனால் ஆக்கிரமிப்பால் தண்ணீர் வரும் பாதையை அடைத்து விட்டனர். கடந்தாண்டு கோயில் திருப்பணி செய்த போது ஒருங்கிணைப்பாளர் துர்காவஜ்ரவேல் முயற்சியால் தெப்பம் சீரமைத்தார். ஆனால் திருப்பணி, கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்திய திருப்பணி குழுவினர், தெப்பத் திருவிழா நடத்தாமல் விட்டு விட்டனர். இரண்டு கோயில்களில் தெப்பத் திருவிழா நடத்துவது வழக்கம். நிதி ஒதுக்கீடுகள் செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொண்ட ஹிந்து சமய அறநிலையத் துறை , தெப்பத் திருவிழா நடத்தாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. எனவே இரண்டு கோயில்களிலும் தெப்பத் திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.