துணை முதல்வர் உத்தரவில் இயக்கப்பட்ட டவுன் பஸ்கள் நிறுத்தம் விவசாயிகள் அவதி
தேனி : தேனி உழவர் சந்தைக்கு துணை முதல்வர் உதயநிதி உத்தரவில் ஜெயமங்கலம், கடமலைக்குண்டில் இருந்து இயக்கப்பட்ட பஸ்கள் சில நாட்களில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், பொது மக்கள் சிரமப்படுகின்றனர். தேனி மாவட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி கடந்த ஜூனில் ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகள் கோரிக்கையை ஏற்று ஜெயமங்கலத்தில் இருந்து பின்னத்தேவன்பட்டி, சொக்கத்தேவன்பட்டி, அன்னஞ்சி வழியாக ஒரு பஸ், கடமலைக்குண்டு, நாகலாபுரத்தில் இருந்து ஒரு டவுன் பஸ் இயக்க உத்தரவிட்டார். இந்த பஸ்கள் இயக்கப்பட்டதால் விளைப் பொருட்களை குறைந்த செலவில் உழவர் சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வந்தனர். ஆனால், உழவர்சந்தை தெருவில் அதிகரித்த ஆக்கிரமிப்பு, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் பஸ்கள் உழவர் சந்தைக்கு இயக்கப்படுவது சில நாட்களிலேயே நிறுத்தப் பட்டது. இதனால் விளைப் பொருட்களை பெரியகுளம் ரோட்டில் உழவர்சந்தை பிரிவு, பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆட்டோவில் கூடுதல் செலவு செய்து வரும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளனர். சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ரோட்டோர கடைகள் அதிகரித்துள்ளதால் உழவர்சந்தை ரோட்டில் நடந்து சென்று கூட காய்கறிகள் வாங்க முடியாத நிலை உள்ளது. ரோட்டோர கடைகளை தாலுகா அலுவலகத்திற்கு அருகே உள்ள ரோட்டில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பஸ்கள் உழவர்சந்தை வரை இயக்க வேண்டும். இயக்கினால் விவசாயிகள், பொது மக்கள் பயனடைவர்., என்றனர்.