உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  தேனியில் பெயரளவில் இயங்கும் மனநல ஆராய்ச்சி போதை மறுவாழ்வு மையம் போதிய டாக்டர்கள் இன்றி, புதர் மண்டிய வளாகத்திற்குள் நுழைய அச்சம்

 தேனியில் பெயரளவில் இயங்கும் மனநல ஆராய்ச்சி போதை மறுவாழ்வு மையம் போதிய டாக்டர்கள் இன்றி, புதர் மண்டிய வளாகத்திற்குள் நுழைய அச்சம்

தேனி: தேனியில் மனநல ஆராய்ச்சி மற்றும் போதை மறுவாழ்வு சிகிச்சை மையத்திற்கு போதிய டாக்டர்கள், பணியாளர்கள் இன்றி பெயரளவில் செயல்படுகிறது. புதர் மண்டிய மருத்துவமனை வளாகத்தில் நுழைவதற்கு நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர். தேனி சமதர்மபுரத்தில் 1971 முதல் தாலுகா அரசு மருத்துவமனை செயல்பட்டது. 14 ஏக்கர் பரப்பளவிலான இம் மருத்துவமனையில் புறநோயாளிகள், உள்நோயாளிகள் பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இயங்கியது. இப் பகுதி மக்கள் அதிகளவில் பயனடைந்தனர். 2004 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை திறந்து வைத்த பின், இம்மருத்துவமனையை தேனி மருத்துவக்கல்லுாரி நிர்வாகத்துடன் இணைக்கப்பட்டது. அதன்பின் படிப்படியாக இங்கு அளிக்கப்பட்டு வந்த சேவை க.விலக்கு மருத்துவக்கல்லுாரிக்கு மாற்றப்பட்டது. ஏர்வாடி மனநல மருத்துவ மையத்தில் ஏற்பட்ட விபத்திற்கு பின்,சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவஆராய்ச்சி மையத்திற்கு நிகராக மனநல மருத்துவ ஆராய்ச்சி போதை மறுவாழ்வு சிகிச்சை மையம் தென் தமிழகத்தில் அமைக்கப்படும் என அறிவித்தார். அந்த அறிவிப்பினை தொடர்ந்து தேனியில் மனநல மருத்துவ ஆராய்ச்சி மற்றும் போதை மறுவாழ்வு சிகிச்சை மையம்உருவானது. ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீடு இன்றி மனநல சிகிச்சை பெயரளவில் செயல்பட்டது. கொரோனா காலத்தில் இங்கு கூடுதல் வார்டுகளாக செயல்பட்டது. அதன் பின்மருத்துவமனை செயல்பாடு இன்றி முடங்கியது. இந்நிலையில் தேனி மனநல மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் மனநலயியல் துறை தலைவராக டாக்டர்.அருண்வெங்கடேஷ், டாக்டர்கள் 5 பேர், உதவிப் பேராசிரியர்கள் 8, சிறப்பு பயிற்சி பெற்ற 3 ஆண் செவிலியர்கள், மருந்தாளுநர், 4 பெண் நர்ஸ்கள், கண்காணிப்பாளர் என மொத்தம் 28 பேர் மாற்றுப்பணியாக ஆவணங்கள் அளவில் உள்ளனர். ஆனால் இங்கு தற்போது ஒன்றிரண்டு டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மற்றவர்கள் தேனிமருத்துவக்கல்லுாரியில் பணிபுரிகின்றனர். எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன் மையம் இல்லை விதிமுறை படி மனநல ஆராய்ச்சி மையத்தில் முதுகலை மன நலயியல் மருத்துவ இயக்குனர் ஒருவரை நியமிக்க வேண்டும். அவருக்கு கீழ் கண்காணிப்பாளர், நிலைய மருத்துவ அலுவலர், உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் நியமிக்க வேண்டும். இதில் யாரும் நியமிக்க வில்லை. மன நலம் பாதித்தோருக்கு ரத்தப் பரிசோதனை செய்ய ஆய்வகம் கூட இல்லை. தற்போது இங்கு பயிற்சிக்கு வரும் மாணவர்கள் நோயாளிகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து தேனி மருத்துவக்கல்லுாரிக்கு எடுத்து சென்று பரிசோதித்து முடிவு வந்த பின்தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் நேர விரயம், நோயாளிகள் பாதிப்பு தொடர்கிறது. இங்கு எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன் மையங்களும் இல்லை. சேதமடைந்த கட்டடங்கள் 1971ல் கட்டப்பட்ட கட்டடத்தில் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் சுவரில் மரங்கள் வேர்விட்டு வளர்ந்துள்ளன. இங்கு பயன்பாட்டில் இருந்த குடும்ப கட்டுப்பாட்டு சிகிச்சை அறை, ரத்த வங்கி, வார்டுகள், பிரேத பரிசோதனை அறை,மேல்நிலை தண்ணீர் தொட்டி உள்ள வளாக பகுதிகள் சேதமடைந்து பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. இவற்றை முறையாக மராமத்து, சுத்தம் செய்து சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பல ஆண்டுகளாக பயன்பாடு இன்றி பாழடைந்துள்ள 8 பணியாளர்கள் குடியிருப்புகள், 2 மருத்துவ அலுவலர்களின் குடியிருப்புகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். உணவு வழங்குவதில் சிரமம் இம்மனநல ஆராய்ச்சி மையத்தில் தற்போது 33 பேர் சிகிச்சையில் உள்ளனர். இங்கு சமையலர், உதவியாளர் இன்றி மருத்துவ பணியாளர்கள் உணவு சமைத்து வழங்கப்படுகிறது. சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களின் உதவிக்கு வரும் உறவினர்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. இம் மருத்துவமனையை முழுமையான மனநல ஆராய்ச்சி போதை மறுவாழ்வு மையமாக மாற்ற மருத்துவக்கல்லுாரி இயக்குனர், சுகாதாரத்துறைசெயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநோயாளிகள் பிரிவு வேண்டும் பெத்தாட்சி, மாவட்ட செயலாளர், இந்திய ஐக்கிய கம்யூ., கட்சி, தேனி : இந்த மனநல மருத்துவ ஆராய்ச்சி மையம் கீழ்பாக்கம் மன மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்தபடியாக தென்தமிழகத்தில் தேனியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் நிரம்பியும், வசதிகள் மேம்படுத்த வேண்டும். புதர்மண்டிய இந்த வளாகத்தை முதலில் சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். இப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் வெளிநோயாளிகள் பிரிவு செயல்படுத்த வேண்டும். மருத்துவக் கல்லுாரி முதல்வர் முத்துசித்ரா கூறியதாவது: மருத்துவக்கல்லுாரி இயக்குனர், சுகாதாரத்துறை செயலாளரிடம் இதுகுறித்து கோரிக்கைவைத்துள்ளோம். விரைவில் ஆராய்ச்சி மையம் முழுமையான இயங்குவதற்கான தேவைகள் குறித்த பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் மூலம் விளக்கக்கோரியுள்ளனர். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதை சமர்பித்த பின் அறிவிப்பு வெளியாகும். தற்போதுள்ள நோயாளிகளுக்கு உணவு, மருத்துவ சிகிச்சைவசதிகள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது',என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ