கடமலைக்குண்டு: கண்டமனூர் ஊராட்சியில் வார்டு உறுப்பினர்கள், தலைவர் ஆகியோரிடையே நிலவும் 'ஈகோ' பிரச்னையால் மக்களுக்கான அடிப்படை தேவைகள் பூர்த்தியாகாமல் தவிக்கின்றனர். க.மயிலாடும்பாறை ஒன்றியம், கண்டமனூர் ஊராட்சியில் கண்டமனூர், ஆத்துக்காடு, ஏழாயிரம்பண்ணை, புதுராமச்சந்திராபுரம் ஆகிய கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சிக்கு குன்னூர் கூட்டு குடிநீர் திட்டம், வீரபாண்டி சத்திரப்பட்டி குடிநீர் திட்டம் ஆகியவை குடிநீர் ஆதாரங்களாக உள்ளன. மேலும் ஊராட்சியில் 6 பொதுக் கிணறுகள், 33 போர்வெல்கள் கூடுதல் நீர் ஆதாரங்களாக உள்ளன. இவ்வளவு குடிநீர் ஆதாரங்கள் இருந்தும் ஊராட்சி மக்களுக்கு தினமும் தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை என்றும், அடிப்படை வசதி,தேவைகள் குறித்து ஊராட்சி நிர்வாகத்தில் புகார் கொடுத்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை என்ற மக்கள் புகார் கூறுகின்றனர். ஊராட்சி நிலவும் பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் கூறியதாவது: குடிநீருக்கு போராடினால் போலீஸ் வழக்கு
அங்குச்சாமி, சமூக ஆர்வலர், நீர் ஆதாரங்கள் பாதுகாப்பு குழு, தேனி மாவட்ட செயலாளர்,கண்டமனுார்: குன்னூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் தினமும் 3 லட்சம் லிட்டரும், வீரபாண்டி சத்திரப்பட்டி குடிநீர் திட்டத்தில் தினமும் 3.5 லட்சம் லிட்டரும் வழங்கப்படுவதாக அலுவலர்கள் கூறுகின்றனர். ஆனால் கிடைக்கும் நீரை 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலைத் தொட்டியில் மட்டும் ஏற்றி வினியோகிக்கின்றனர். இதனால் ஊராட்சி அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் கிடைப்பதில்லை. ஊராட்சியின் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப குடிநீரீன் அளவு உயர்த்த வில்லை. பரமசிவன் கண்மாய்க்கரை அருகே 2 லட்சம் லிட்டர் கொள்ளவு மேல்நிலைத் தொட்டி பல மாதங்களாக பயன்பாட்டில் இல்லை. இதில் தண்ணீர் ஏற்றி வினியோகித்தால் குடிநீர் பிரச்னை தீர்ந்துவிடும். இதை ஊராட்சி நிர்வாகத்தில் தெரிவித்தால் கண்டு கொள்வதில்லை. மக்கள் தான் தினமும் தவிக்கின்றனர். பரமசிவன் கண்மாய், புதுக்குளம் கண்மாய்களை ஊராட்சியே குப்பையை கொட்டி மாசுபடுத்தி வருகின்றனர். குப்பையால் கண்மாய் நீர் நச்சுத்தன்மை அடைகிறது. இந்த நீரை குடிக்கும் ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகள் பாதிப்படைகின்றன. கண்மாயை பாதுகாக்கும் நடவடிக்கை இல்லை. பொதுமக்கள் பிரச்னைகள் குறித்து புகார் கொடுத்தால் முறையான பதில் இல்லை. பிரச்னைகளும் தீர்ந்தபாடில்லை. குடிநீருக்கு பொதுமக்கள் போராடினால் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்கின்றனர். ஊராட்சி நிர்வாகத்தை உயர் அதிகாரிகள் கண்டிப்பதில்லை. பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகங்கள்
அய்யனார், கண்டமனுார்: ஊராட்சியில் குவியும் குப்பையை அடிக்கடி அகற்றுவதில்லை. சாக்கடை சுத்தம் செய்வதில்லை. பல இடங்களில் தெரு விளக்குகள் எரியவில்லை. சமுதாயக்கூடம் வசதி ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் பிரச்னைக்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யும் நடவடிக்கை இல்லை. பரமசிவன் கண்மாய் கரையை திறந்தவெளி கழிப்பிடமாக்கி விட்டனர். இப்பகுதியில் ஏற்படும் சுகாதாரக் கேடு கண்மாயையும் பாதிப்படையை செய்கிறது. 6 சுகாதார வளாகங்கள் இருந்தும் பராமரிப்பு இல்லாததால் பெண்கள் திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர். செயல்படாத சுகாதார வளாகங்களில் தேவையான வசதிகள் செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். வரி வசூலில் முறைகேடு
சங்கிலியம்மாள், ஊராட்சி துணைத்தலைவர், கண்டமனுார்: ஊராட்சியில் தலைவர் உறவினர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. வரி வசூலில் முறைகேடு செய்கின்றனர். இதுகுறித்து நிர்வாகத்தில் கேட்டால் மிரட்டுகின்றனர். என்னிடம் இருந்த 'செக்' பவரை அதிகாரிகள் உதவியுடன் வேறு ஒரு உறுப்பினருக்கு மாற்றி விட்டனர். செய்யாத வேலைகளுக்கு பணம் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்துகின்றனர். பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்து பிப்ரவரி 14ல் துணைத் தலைவர் உட்பட 6 வார்டு உறுப்பினர்கள் கலெக்டரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். இதுவரை விசாரணை மேற்கொள்ளவில்லை. தவறான பிரச்சாரம்
கௌரி, ஊராட்சி தலை வர், கண்டமனுார்: மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய்கள் பதிக்கும் பணியின் போது இப்பகுதியில் குழாய் உடைந்ததால் குடிநீர் சப்ளை பாதித்தது. ஊராட்சியில் குடிநீர் பிரச்னை இல்லை. குடிநீர் பிரச்னை இருப்பதாக தவறான பிரச்சாரம் செய்கின்றனர். தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பரமசிவன் கண்மாய் கரை அருகே உள்ள 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலைத் தொட்டியில் நீர் கசிவு இருப்பதால் பயன்படுத்தவில்லை. மேல்நிலை தொட்டியின் படிக்கட்டுகள் சேதம் அடைந்துள்ளதால் பணியாளர்கள் மேல்நிலைத் தொட்டியில் ஏறி பணிகள் செய்ய மறுக்கின்றனர். குடியிருப்புகளில் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சுவதால் சீரான விநியோகம் கிடைப்பதில்லை. சுகாதார வளாகங்களில் குழாய், பக்கெட், லைட் ஆகியவை திருடு போகிறது. பராமரிப்பு, பாதுகாப்பில் பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லை. 6 உறுப்பினர்களின் ராஜினாமா கடிதம் குறித்து அதிகாரிகள் தான் விசாரித்து முடிவு செய்ய வேண்டும்.