| ADDED : நவ 21, 2025 05:13 AM
கம்பம்: சண்முகா நதி அணை, சோத்துப் பாறை மற்றும் மஞ்சளாறு அணைகளில் மைக்ரோ மின் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக மின்சார தேவை அதிகரித்து வருகிறது. மனிதனின் அன்றாட வாழ்க்கையில் மின்சாரம் இன்றியமையாத தேவையாக மாறிவிட்டது. தேவைக்கும் மின் உற்பத்திக்கும் பெரிய அளவிலான இடைவெளி உள்ளது. எனவே மின் உற்பத்தியை பல வழிகளில் பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அணு, காற்று, நிலக்கரி, நீர், உள்ளிட்ட பல வழிகளில் மின் உற்பத்தி நடைபெறுகிறது. தேனி மாவட்டத்தில் பெரியாறு மின் நிலையம், சுருளியாறு மின் நிலையம், குருவானூத்து பாலம், குள்ளப்பகவுண்டன்பட்டி, வைகை அணை உள்ளிட்ட 4 இடங்களில் மைக்ரோ மின் நிலையங்கள் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழையில் குள்ளப்பகவுண்டன்பட்டி மைக்ரோ மின் நிலையம் சேதமடைந்து விட்டது. தற்போது தேனி மாவட்டத்தில் உள்ள சண்முகா நதி அணை (52.5 அடி), சோத்துப் பாறை அணை (126 அடி), மஞ்சளாறு அணை (57 அடி) தண்ணீர் தேக்கப்படுகிறது. வைகை அணையில் 6 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதே போன்று மூன்று அணைகளிலும் மைக்ரோ மின் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இது தொடர்பாக வாரிய வட்டாரங்களில் விசாரித்த போது, ''மைக்ரோ மின் நிலையங்களில் முதலீடு செய்வதற்கு இணையாக லாபம் இல்லாமல் உள்ளது. இருந்த போதும் அணைகளில் மைக்ரோ மின் நிலையங்கள் அமைப்பதற்கு ஆய்வுகள் நடைபெற உள்ளது என்றார்.