சாய்ந்த டெலிபோன் கம்பம் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி
போடி: போடி ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் அசேன் உசேன் தெரு மெயின் ரோட்டில் சாய்ந்த நிலையில் இருந்த டெலிபோன் கம்பம் தினமலர் நாளிதழின் செய்தி எதிரொலியால் அகற்றப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். போடி ரயில்வே ஸ்டேஷன், சுப்புராஜ் நகர் நகராட்சி விளையாட்டு மைதானம், தினசரி மார்க்கெட், உழவர் சந்தை, வர்த்தகர்கள் சங்கத்திற்கு செல்லும் முக்கிய ரோடாக அசேன் உசேன் தெரு அமைந்து உள்ளது. இந்த ரோட்டில் பள்ளி மாணவர்கள், பொதுமக்களும் டூவீலர், ஆட்டோ, கார், பள்ளி செல்லும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோட்டில் டெலிபோன் கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் இருந்தது. அப்பகுதியில் உள்ள வீடு, அலுவலகம், கடைகளுக்கு தொலைபேசி இணைப்புகள் வழங்கும் வகையில் டெலிபோன் கம்பம் இருந்தது. இந்த டெலிபோன் கம்பத்தின் அடிப்பகுதி அரிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் சாய்ந்த நிலையில் இருந்தது. பல மாதங்கள் ஆகியும் பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் சீரமைக்கவில்லை. இது குறித்து தினமலர் நாளிதழில் புகைப்படத்துடன் கூடிய செய்தி ஐந்து நாட்களுக்கு முன்பு வெளியானது. இதன் எதிரொலியால் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் அசேன் உசேன் தெருவில் சாய்ந்த நிலையில் இருந்த டெலிபோன் கம்பம் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் செல்லும் மக்கள், பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.