பள்ளிக்கு முன், பாலிதீன் கழிவுகளுடன் தேங்கி நிற்கும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம்
கூடலுார்: கூடலுார் மாநில நெடுஞ்சாலையில் உள்ள அரசு பள்ளிக்கு முன், பாலிதீன் கழிவுகளுடன் பல நாட்களாக தேங்கி நிற்கும் கழிவு நீரால் மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கூடலுார் மாநில நெடுஞ்சாலையில் ராஜாங்கம் நினைவு அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியும், துவக்கப் பள்ளியும் உள்ளன. பள்ளிக்கு முன்பு செல்லும் ஓடையில் பல நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் பாலிதீன் கழிவுகளும் குவிந்து கிடப்பதால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ள நிலையில் 2 பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களுக்கு கொசுக்களால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த கன மழையால் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து சுள்ளக்கரை ஓடை வழியாக காட்டாற்று வெள்ள நீர் புகுந்து ஓடை முழுவதும் குப்பை நிரம்பியது. நகராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டது. இருந்த போதிலும் கழிவுநீர் கடந்து செல்வதற்கான பணிகள் நடக்க வில்லை. இதனால் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் முழுவதும் இப்பகுதியில் தேங்கி நிற்கிறது. மாணவர்களுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படுவதற்கு முன் உடனடியாக பாலிதீன் கழிவுகளை அகற்றி கழிவுநீர் வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என, பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.